காவேரி மருத்துவமனை என்னுடையதா? அட ஏங்க நீங்க வேற! அதில் 7 பேர் கூட்டு! கே.என்.நேரு பளிச்!
திருச்சி: காவேரி மருத்துவமனையை 7 பேர் சேர்ந்து கூட்டாக நடத்தி வரும் நிலையில், அந்த மருத்துவமனையை என்னுடையது என அண்ணாமலை கூறினால் அதற்கு என்ன அர்த்தம் என அமைச்சர் கே.என்.நேரு வினவியுள்ளார்.
காவேரி மருத்துவமனையை என்னுடையது எனக் கூறும் அண்ணாமலையிடம் சொல்லி, அந்த மருத்துவமனையை மட்டும் வாங்கிக் கொடுங்க என அமைச்சர் நேரு கலாய்த்தார்.
தமிழகத்தின் முக்கிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்று காவேரி மருத்துவமனை. கடந்த 2018ஆம் ஆண்டுக்கு முன்பாக சென்னை மக்கள் மத்தியில் மட்டும் பரிச்சயம் பெற்றிருந்த இந்த மருத்துவமனை கருணநிதிக்கு சிகிச்சை அளித்த காரணத்தால் தமிழகம் முழுவதும் பரிச்சயம் ஆகத் தொடங்கியது.

கருணாநிதியின் இறுதி நாட்கள் காவேரி மருத்துவமனையில் கழிந்ததால் நொடிக்கு நொடி ஊடகங்களில் பேசு பொருளாகவும், தலைப்புச் செய்தியாகவும் காவேரி மருத்துவமனை இடம்பெற்றது.
இதனிடையே திருச்சி, காரைக்குடி, என பல இடங்களில் தற்போது இம்மருத்துவமனை கிளை பரப்பியுள்ளது. இதனிடையே இந்த மருத்துவமனை அமைச்சர் நேருவுக்கு சொந்தமானது என யூகங்களின் அடிப்படையில் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருந்தன.
அதற்கேற்றார் போல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் காவேரி மருத்துவமனை அமைச்சர் நேருவுக்கு சொந்தமானது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் அட ஏங்க நீங்க வேற, காவேரி மருத்துவமனையை 7 பேர் கூட்டாக நடத்தி வருகிறார்கள் என்றும் எனது மருத்துவமனை என்றால் அண்ணாமலையிடம் சொல்லி அதை மட்டும் வாங்கிக் கொடுக்கச் சொல்லுங்க எனவும் நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.

தன்னுடைய சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தேர்தலில் போட்டியிடும் போதே கொடுத்திருப்பதாகவும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கப்பட்டால் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு போடுவார்கள் எனவும் நேரு கூறினார்.
திமுக பைல்ஸ் என்ற பெயரில் முக்கிய அமைச்சர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டிருக்கும் நிலையில் அமைச்சர் நேரு இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications