திருச்சியில் இடம் கொடுக்க நான் ரெடி! உதயநிதியிடம் கே.என்.நேரு முக்கிய டிமாண்ட்!
திருச்சி: திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அமைச்சர் கே.என்.நேரு முக்கிய டிமாண்ட் ஒன்றை வைத்திருக்கிறார்.
திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் (National College), "விளையாட்டில் மறுமலர்ச்சி" என்கிற தலைப்பில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள பன்னாட்டு கருத்தரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பன்னாட்டு கருத்தரங்கை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒருங்கிணைத்திருந்தார். இதில் கலந்துகொள்ள வேண்டி சென்னையிலிருந்து திருச்சி வந்த உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சாலை மார்க்கமாக ஈரோடு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக மேடையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலினை உரிமையோடு தம்பி என்றே அழைத்தார். உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை விளையாட்டுத் துறையை மட்டுமல்லாமல் எல்லா துறைகளையும் கண்காணித்து வருகிறார் என்றும் நீட் தேர்வை ஒழிக்க உதயநிதி ஸ்டாலின் கடும் முயற்சிகள் எடுத்து வருகிறார் எனவும் புகழாரம் சூட்டினார்.
கடைசியாக மெகா கோரிக்கை ஒன்றை போகிற போக்கில் உதயநிதி ஸ்டாலினிடம் முன் வைத்தார் அமைச்சர் நேரு. அதாவது திருச்சியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஒலிம்பிக் அகாடமி அமைக்க 50 ஏக்கர் நிலத்தை தயார் செய்து கொடுத்ததை போல், விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைக்கவும் நாங்கள் இடம் கொடுக்கத் தயார் எனத் தெரிவித்தார். அமைச்சர் நேருவின் இத்தகைய கோரிக்கை குறித்து உதயநிதி ஸ்டாலின் பெரிதாக எந்த பதிலும் கூறவில்லை.
திறமை இருந்தால் மேலே வந்துவிடலாம் என்கிற துறை விளையாட்டுத்துறை மட்டும் தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் காலத்தில் தமிழக கிராமப்புற விளையாட்டு வீரர்கள் உலகளவில் பெயர் பெற வேண்டும் என தாம் விரும்புவதாக அமைச்சர் நேரு கூறினார். விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு அரங்கங்கள் என எவ்வளவோ உங்கள் துறைகளில் செய்து வருகிறீர்கள் என உதயநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
இதனிடையே முன்னதாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நிறுவப்பட்ட கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உதயநிதி.












Click it and Unblock the Notifications