ராகுல் காங்கிரஸ் தலைவராக வேண்டிய அவசியமில்லை.. பாஜக பாணியில் காங்கிரஸ்.. கேஎஸ் அழகிரி பதில்!
திருச்சி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் தேர்வு செய்யப்படுவாரா அல்லது மூத்த தலைவர்கள் யாரேனும் தலைவராக களமிறக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக சசி தரூர் அல்லது அசோக் கெலாட் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீா் வரை செப். 7 ம் தேதி தேச ஒற்றுமை நடைப்பயணத்தைத் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையொட்டி திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கே.எஸ்.அழகிரி பேச்சு
இதில் பங்கேற்க வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மக்களின் நல்லிணக்கத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த நடைப்பயணத்தை ராகுல்காந்தி மேற்கொள்கிறார். பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி அதிகமாகியுள்ளது.

பாஜக மீது விமர்சனம்
பொதுமக்கள் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதைக் கூட பாஜ அரசு பட்டியலிட்டுள்ளது. முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சியில் அரிசி ரூ. 2 க்கும்,கோதுமை ரூ. 1 க்கும் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் பாஜக அரசு அரிசி,கோதுமைக்கு 5 சதம் ஜிஎஸ்டி விதித்திருப்பது கொடுமையானது என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி
தொடர்ந்து ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா என்ற கேள்விக்கு, எப்போதும் ஒருவர் கட்சியிலிருந்து விலகும்போது அந்தக் கட்சி குறித்து விஷத்தை கக்கிவிட்டுத்தான் செல்வார்கள். அதுபோலத்தான் குலாம் நபி ஆசாத்தும் சென்றுள்ளார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனென்றால் பிரதமராக உள்ள மோடி, பாஜகவின் தலைவரில்லை. அதுபோல ராகுல் காந்தி காங்கிரஸ் தலைராவாரா, மாட்டாரா என்ற விவாதம் தேவையற்றது. அவரது செயல்பாடு கட்சிக்கு உறுதுணையாக உள்ளது என்று தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம்
தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் குறித்து கருத்து தெரிவித்த கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் திமுக இதுவரை சிறப்பாகவே ஆட்சி செய்து வருகிறது. சென்னைக்கு விமான நிலையம் அவசியம். ஆனால் அது பரந்தூரில்தான் வர வேண்டும் என காங்கிரஸ் கூறவில்லை. நிலம் கையகப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். சிறு சிறு குறைகள் இருந்தாலும் அவற்றைச் சுட்டிகாட்டி சரிசெய்து வருகிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications