ஓட்டை வழியாக ஊர்ந்து.. நகைகளை அள்ளி போட்ட லலிதா ஜுவல்லரி திருடர்கள்.. பரபர சிசிடிவி காட்சிகள்!
Recommended Video
திருச்சி: வெறும் ஸ்குரூ டிரைவரை கொண்டு.. இன்ச் இன்ச்சாக.. அந்த கண்ணாடி அலமாரியை நகர்த்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர் லலிதா ஜுவல்லரி கடை கொள்ளையர்கள். திருடிய நகைகளை ஒரு கறுப்பு பைக்குள் எடுத்து அடுக்கி வைத்து கொண்டு.. ஜுவல்லரி கடையில் இருந்து கொள்ளையர்கள் தப்பும் சிசிடிவி வீடியோ காட்சி இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் நேற்று 100 கிலோ மதிப்பிலான தங்க, வைர நகைகள் கொள்ளை போயின. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பகல் நேரத்தில் இருந்தாலும், இரவு நேரங்களில் 4 வாட்ச்மேன்கள் இருந்தும் இந்த கொள்ளை நடந்துள்ளது. ஏசி மெஷின் உள்ள சுவரில் ஓட்டை போட்டுக் கொண்டு 2 பேர் உள்ளே வந்து சாவகாசமாக திருடி சென்றுள்ளனர்.
கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் கமிஷனர் அமல்ராஜே நேரடியாக இறங்கி உள்ளார். இதற்கான எந்தவித தடயமும், ஆதாரமும், துப்பும் கிடைக்கவில்லை. அதனால் கடையில் இருந்த சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்தபோது, 2 கொள்ளையர்களும் மாஸ்க் அணிந்து வந்திருந்தது தெரியவந்தது.
பெரிய ஓட்டை
அதனால், அவர்களின் போட்டோக்களை போலீசார் நேற்று வெளியிட்டிருந்த நிலையில், இப்போது அது தொடர்பான 2 சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர். போலீசார் சந்தேகப்பட்டது போலவே, கடையின் கீழ்த்தளத்தில் போட்ட பெரிய ஓட்டை வழியாகத்தான் திருடர்கள் உள்ளே நுழைவது பதிவாகியுள்ளது.
நகை பெட்டிகள்
கீழ்தளத்தில் உள்ள நகைகள்தான் முதலில் கொள்ளையடிக்கப்படுகிறது. அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகை பெட்டிகளை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வைக்கிறார்கள். அதிலிருந்து நகைகளை தனியாக எடுத்து கொண்டு அட்டை பெட்டியை அங்கேயே போட்டுவிடுகிறார்கள்.
அலமாரிகள்
கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மொத்த நகையையும் அள்ளுகிறார்கள். இன்ச் இன்ச்சாக அந்த கண்ணாடியை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, நகைகளை எடுக்கிறார்கள். கையில் பெரிய ஆயுதங்கள் எல்லாம் இவர்களிடம் இல்லை. வெறும் ஸ்குரு டிரைவரை கொண்டுதான் கண்ணாடி அலமாரியை திறக்கிறார்கள்.
அடுக்கி வைக்கிறார்கள்
திருடிய நகைகளை எடுத்து பக்கத்தில் வைத்திருக்கும் கருப்பு சிவப்பு நிற பைக்குள் ஒருவர் திணிக்கிறார். இன்னொருவரும் அதற்கு உதவுகிறார். இந்த கருப்பு பையில் ஒரு கயிறு கட்டப்பட்டுள்ளது. நகைகள் கொள்ளையடித்துவிட்டு, இந்த கயிறு மூலம்தான் நகைகளை இழுத்து சென்றுள்ளனர்.
சிக்னல்
மொத்தமாக கடையை சூறையாடிவிட்டு, யாராவது அந்த பகுதியில் வருகிறார்களா என்பதை தெரிந்து கொள்ள, கயிறு மூலமாகவே சிக்னலும் அனுப்பி உள்ளனர். கொள்ளை அடித்து முடிக்கும் வரை கப்-சிப் என்று இருந்திருக்கிறார்கள் இருவரும். வெளியில் இருந்தும் எந்த சத்தமும் கேட்கவில்லை. கொள்ளை முழுக்க வெறும் சிக்னல்தான்!
மதுபானம்?
கடைக்குள் விடிகாலை 3.10க்கு உள்ளே நுழைகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த கொள்ளை நடக்கிறது. மிகவும் சாவகாசமான கொள்ளையாக இது பார்க்கப்படுகிறது. கொள்ளை அடிக்கும்போது இவர்கள் தண்ணி அடித்திருக்கலாம் என்றும் போலீசார் சொல்கிறார்கள். அங்கே மதுபாட்டில்கள் விழுந்து கிடந்ததாம். ஒரு இடத்திலும் கைரேகைகள் பதியவே இல்லை. அதனால் போலீசாருக்கு இது பெரிய சவாலாக உள்ளது. ஒத்த ஸ்குரூ டிரைவரை வைத்து கொண்டு மொத்த கடையையும் இவர்கள் காலி செய்துள்ள இந்த சிசிடிவி காட்சிதான் வைரலாகி வருகிறது.