வாதாடிய வக்கீலுக்கே பீஸ் கொடுக்காமல் அலைக்கழித்து.. கொலை மிரட்டல்.. பவர் ஸ்டார் சீனிவான் புகார்
மணப்பாறை : தனக்காக நீதிமன்றங்களில் வாதாடிய வக்கீலுக்கே பீஸ் பணம் கொடுக்காமல் அலைக்கழித்ததோடு, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சி கிராமம் பொம்மம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி. இவர் மணப்பாறை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

இவர்தான் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கில் ஆஜராகி வாதாடி வந்துள்ளார். இந்த வழக்கு இப்போதும் நடந்து வருகிறது.
இந்நிலையில் அவருக்கான கட்டணத்தைக் கொடுக்காமல் சீனிவாசன் அலைக்கழித்து வந்தாராம். ஒரு கட்டத்தில் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் சீனிவாசன் பணம் கொடுக்காமல் திட்டி வந்தாராம்.
இந்நிலையில் வழக்கறிஞர் பாண்டி நேற்று சீனிவாசனுக்கு செல்போன் மூலம் பேசி செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது சீனிவாசன் தகாத வார்த்தைகளால் வழக்கறிஞர் பாண்டியை பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
அந்த உரையாடல் பதிவுகளோடு வழக்கறிஞர் பாண்டி, திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது மணப்பாறை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications