திருச்சி மாவட்டம் முழுவதும் ஜனவரி 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!
திருச்சி: வரும் ஜனவரி 10 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில். இங்கு வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, வைகுண்ட ஏகாதசி திருவிழா, நாளை 31.12.2024 முதல் 09.01.2025ஆம் தேதி வரை பகல் பத்து திருவிழாவாகவும், 11.01.2025ஆம் தேதி முதல் 20.01.2025 ஆம் தேதி வரை இராப்பத்து திருவிழாவாகவும் நடைபெறுகிறது.

21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலை 5.15 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு போதுமான பாதுகாப்பு அளிப்பதற்காக உள்ளுர் மற்றும் வெளியூர் காவல்துறை அதிகாரிகள் என சுமார் 2500 பேர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இந்நிலையில், வரும் ஜனவரி 10 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். அன்றைய தினம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக ஜனவரி 25 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக ஈடு செய்யப்படும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். பள்ளிகள், கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றால் அந்த இடங்களில் இந்த விடுமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாளில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications