பாஜகவில் இணைகிறாரா கமல் கட்சியின் முன்னாள் முக்கிய புள்ளி? எம்.பி.சீட் டிமாண்ட்! கமலாலயம் முடிவு?
திருச்சி: மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய பொறுப்பு வகித்தவரும், ஒரு காலத்தில் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர் என அறியப்பட்டவருமான திருச்சி தொழிலதிபர் முருகானந்தம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த முருகானந்தம் மக்கள் நீதி மய்யம் கட்சியில் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை எதிர்த்து போட்டியிட்டவர். கட்டுமான நிறுவன அதிபர், ஆம்னிப் பேருந்து உரிமையாளர், ரோட்டரி சங்க செயற்பாட்டாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், எக்சல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனர் என பன்முகங்களை கொண்ட இவர், பணத்திற்கு பஞ்சமில்லாதவர் எனச் சொல்லப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு தனது நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு கொடுத்து வருகிறார். பொதுவாழ்க்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், அரசியலுக்கு வருவதற்கு முன்பே ரோட்டரி சங்கங்கள் மூலம் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சியுடம் கமல் கூட்டணி வைத்தது முருகானந்தத்துக்கு பிடிக்கவில்லை. கமல்ஹாசனின் திட்டமிடாத செயல்பாடுகளும், கூட்டணியும் தான் தேர்தக் தோல்விக்கு காரணம் எனக் கூறி ம.நீ. ம.விலிருந்து கடந்த 2021 அக்டோபர் மாதம் வெளியேறி தொழில்களை கவனிக்க ஆரம்பித்தார்.
இவர் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய தருணத்தில் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ், பொள்ளாச்சி டாக்டர் மகேந்திரன், பத்மப்பிரியா, போன்றோரும் மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகினார்கள். இதில் சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ். அகாடமியை சொந்தமாக ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிய நிலையில், மகேந்திரனும், பத்மப்ரியாவும் திமுகவில் ஐக்கியமாகி இன்று அக்கட்சியில் சுற்றுச்சூழல் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர்.
இதனிடையே முருகானந்ததை வளைக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு தரப்பிலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த முயற்சியில் கங்கிரஸை காட்டிலும் பாஜக முன்னணி பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வாய்ப்பு தர வேண்டும் என்ற டிமாண்ட் முருகானந்தம் தரப்பில் முன் வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது பற்றி தொழிலதிபர் முருகானந்தத்திற்கு நெருங்கிய ரோட்டர் சங்க நண்பர்களிடம் பேசிய போது, அவர் தேசியக் கட்சியில் இணைவது உறுதி அது காங்கிரஸ் கட்சியா, பாஜகவா என்பது பற்றி தங்களுக்கு நோ ஐடியா என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications