காலம் பொன் போன்றது! ஷார்ப்பாக குறித்த நேரத்தில் ஆஜராகும் அமைச்சர் அன்பில் மகேஷ்! கட்சியினர் வியப்பு!
திருச்சி: கட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அரசு நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி குறித்த நேரத்தில் அங்கு ஆஜராகி அதிகாரிகளையும், கட்சியினரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
பொதுவாக அரசியல்வாதிகளை பொறுத்தவரை 6 மணிக்கு வருகை தருவார் எனக் கூறப்பட்டால் 8 மணிக்கு தான் வருகை தருவார்கள். அதுவரை அவருக்காக ஒரு பெரிய கூட்டமே காத்திருக்கும் சூழல் ஏற்படும்.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை பொறுத்தவரை 9 மணி என்றால் 8.55-க்கே நிகழ்விடத்தில் ஆஜராகி அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிடுகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் அமைச்சர்கள் அவரவர் மாவட்டங்களில் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்வதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றிருக்கிறார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
காலை 9 மணிக்கு கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எப்படியும் அமைச்சர் வருவதற்கு ஒன்பதரை மணி முதல் 10 மணி ஆகிவிடும் என கட்சியினர் பலரும் தாமதமாக நிகழ்விடத்துக்கு சென்றிருக்கின்றனர். ஆனால் அமைச்சர் அன்பில் மகேஷோ, 9 மணி கூட்டத்துக்கு 8.55 மணிக்கே மிக ஷார்ப்பாக அங்கு ஆஜராகி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்ததோடு திமுகவுக்கு எவ்வாறு மக்களிடம் வாக்குக்கேட்க வேண்டும் என்ற டிப்ஸ்களையும் நிர்வாகிகளுக்கு கொடுத்துவிட்டு அடுத்த நிகழ்விடமான துவரங்குறிச்சி புறப்பட்டு சென்றுவிட்டார்.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக இருப்பதாலோ என்னவோ, அன்பில் மகேஷை பொறுத்தவரை நேரம் தவறாமையை முழுமையாக கடைபிடித்து வருகிறார். இதனால் குறித்த நேரத்தில் குறித்த பணிகள் முடிவதால் அவருக்கு மட்டுமல்ல அந்த நிகழ்வில் பங்கேற்கும் கட்சியினர், அதிகாரிகள், பொதுமக்கள் என பலருக்கும் நேரம் வீணாக கழியாமல் மிச்சமாகிறது. திருச்சி, தஞ்சை, என இரண்டு மாவட்டங்களிலும் தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும் என்பதால் நாளொன்றுக்கு 150 கி.மீ.க்கு குறையாமல் அமைச்சர் அன்பில் மகேஷ் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

உதயநிதிக்கு பரிசு
இதனிடையே திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற போது காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது என்ற வாசகம் தாங்கிய பெயர் பலகையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிசாக கொடுத்தது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications