1 முதல் 8ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் கூறிய முக்கிய தகவல்
திருச்சி: தமிழ்நாட்டில் ஏற்கனவே 9ஆம் வகுப்பு முதல் +2 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டதில் இருந்தே பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன.
இடையில் கொரோனா முதல் அலை கட்டுக்குள் வந்தபோது, சில காலம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இருப்பினும், கொரோனா 2ஆம் அலையால் அதுவும் விரைவில் மூடப்பட்டன.

கொரோனா பாதிப்பு
இந்தச் சூழலில் ஆன்லைன் கல்வி முறையால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இது குறித்து பல்வேறு ஆய்வாளர்களும் கவலை தெரிவித்திருந்த நிலையில், பள்ளிகளை உரியப் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் விரைவாகத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அதேநேரம் மறுபுறம் 3ஆம் அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், சிறார்களுக்கான வேக்சின் பணிகள் முடியும் வரை பள்ளிகளைத் திறப்பதில் மாநில அரசுகள் அவசரம் காட்டக் கூடாது என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு
இருப்பினும், ஆன்லைன் கல்வி என்பது சிறார்களை மனரீதியாகப் பாதிக்க வாய்ப்புள்ளதால் உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்தது. இதையடுத்து படிப்படியாகப் பள்ளிகளைத் திறக்க அனைத்து மாநிலங்களும் முடிவு எடுத்தன. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த செப். 1ஆம் தேதி 9 முதல் +2 வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பிற்குப் பிறகு வைரஸ் பாதிப்பு அதிகரிக்குமோ என அஞ்சப்பட்டது. இருப்பினும், நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்
9 முதல் +2 மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். திருச்சி திருவெறும்பூர் அருகே அமைந்துள்ள காட்டூர் காவேரி நகர்ப் பகுதியில் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாடு முதல்வர் சட்டசபையில் பேசும் பொழுது இது எனது அரசு இல்லை, நமது அரசு என்று குறிப்பிட்டார். நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும்போது, அனைத்துக் கட்சியினரும் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டு இருக்கின்றனர்.

நீட் தேர்வு
தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் நீட் தேர்வு கடைசி நீட் தேர்வாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்று, வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை தமிழ்நாடு முதல்வருக்கு உள்ளது" என்றார்

தொடக்கப் பள்ளிகள் திறப்பு எப்போது
தொடர்ந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளைத் திறப்பது குறித்து வரும் 15ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு வல்லுநர்கள் உடனான ஆலோசனைக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் முடிவெடுப்பார். முதல் 40 முதல் 45 நாட்களுக்கு மாணவ மாணவிகளைப் பள்ளிக்கு வரவைப்பது தான் முக்கிய நோக்கம். இதற்காகப் புத்தாக்க பயிற்சிகள் நடத்தப்படுகிறது. அதன் பின்னரே முறையான வகுப்புகள் தொடங்கும்" எனத் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications