துணை முதலமைச்சர் பதவிக்கு நிகரான பொறுப்பை கையாள்கிறார் உதயநிதி ஸ்டாலின்! அன்பில் மகேஷ் பேச்சு!
திருச்சி: துணை முதலமைச்சர் பதவிக்கு நிகரான பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் கையாண்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியிருக்கிறார்.
திருச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வருக்கு நிகராக அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தியால் மக்கள் எழுச்சி.. தேசிய அளவில் காங்கிரஸை உள்ளடக்கிய கூட்டணி தேவை.. ஸ்டாலின் அதிரடி
திருச்சியில் விழா
திருச்சியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதியை துணை முதல்வருக்கு நிகராக உயர்த்தி பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை என்பது கிட்டதட்ட துணை முதல்வர் பதவிக்கு நிகரானது என அவர் தெரிவித்திருக்கிறார்.
துணை முதல்வர்
இதன் மூலம் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் மட்டுமல்ல அவர் துணை முதலமைச்சருக்கு நிகரானவர் என்பதை தெரிவித்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க்ப்படுகிறது. ஏனெனில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் அன்பில் மகேஸ். இந்நிலையில் இன்று துணை முதல்வர் பதவி குறித்து முதல் முறையாக பேசியிருக்கிறார்.
அன்பு கோட்டை
இதேபோல் முதல்வர் ஸ்டாலினை வரவேற்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், சென்னையில் அலுவல் கோட்டை இருந்தாலும் உங்களின் அன்புக் கோட்டை திருச்சி தான் எனக் கூறினார். ஆங்கில புத்தாண்டு பரிசாக திருச்சி மாவட்டத்துக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். தங்களை பொறுத்தவரை முதல்வரின் வருகையால் இன்று முதலே புத்தாண்டு தான் என அவர் குறிப்பிட்டார்.
ஸ்டாலின் ரியாக்ஷன்
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வருக்கு நிகரான பொறுப்பை கையாள்வதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பேசிய போது முதல்வர் ஸ்டாலின் எந்த ரியாக்ஷனையும் வெளிப்படுத்தாமல் நிகழ்ச்சி நிரல் அட்டவணையை படித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.