ஓ.பன்னீர் செல்வம் வர்ராரு! திமுக கூட்டணியில் ஓபிஎஸ்! உடைத்து பேசிய கே.என்.நேரு
திருச்சி: திருச்சியில் 'நலன் காக்கும் ஸ்டாலின்' முகாமை பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, ஓபிஎஸ் திமுக கூட்டணிக்கு வந்து கொண்டிருக்கிறார் என பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறிய நிலையில் அவர் தவெகவுடன் கூட்டணி செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

'நலன் காக்கும் ஸ்டாலின்' எனும் திட்டத்தை இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்தார். சென்னையில் அவர் தொடங்கி வைத்த நிலையில் மீதமுள்ள மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் திறந்து வைத்தனர்.
அந்த வகையில் திருச்சியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' எனும் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், "'நலன் காக்கும் ஸ்டாலின்', 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டங்களில் முதல்வரின் பெயர் போட கூடாது என முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளாரே" என நிருபர்கள் கேட்டனர்.
உங்களுடன் ஸ்டாலின்
அதற்கு கே.என்.நேரு கூறுகையில், "நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதைப் பற்றி நாம் சொல்ல முடியுமா... அவர்கள் மட்டும் எல்லாத் திட்டத்துக்கும் அம்மா, அம்மா என பெயரிட்டனர். இப்போது எங்களைக் குறை கூறுகிறார்ள்" என்றார். முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் இரு முறை சந்தித்தாரே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு கே.என்.நேரு கூறுகையில், "திமுக கூட்டணியில் இருந்து அதிமுகவுக்கு சில கட்சிகள் வருவதாக அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த கூட்டணியில் இருந்துதான் திமுகவுக்கு ஆட்கள் வருகிறார்கள். ஓபிஎஸ் வந்து கொண்டிருக்கிறார்.
திமுக கூட்டணியில் ஓபிஎஸ்
எல்லோரும் வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருந்து யாரும் அங்கு செல்ல மாட்டார்கள்" என கே.என். நேரு தெரிவித்துள்ளார். முன்னதாக முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு நேரம் கொடுக்கவில்லை. அதே வேளையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி கிடைத்தது.
நடைப்பயிற்சி
இதனால் ஓபிஎஸ் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நேற்று முன் தினம் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி முடிவெடுத்தார். அப்போது அவர்கள் பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறுவதாக அறிவித்தனர். அப்போது அவரிடம் கூட்டணி குறித்து கேட்ட போது, "இப்போது வரை யாருடனும் கூட்டணி இல்லை" என தெரிவித்தார். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பதற்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை நடைப்பயிற்சியின் போது பெசன்ட் நகர் தியாசோபிக்கல் சொசைட்டியில் ஓபிஎஸ் சந்தித்தார்.
முதல்வரை இரு முறை சந்தித்த ஓபிஎஸ்
இதுகுறித்து கேட்ட போது, "சென்னையில் இருந்தால் அந்த இடத்தில் நானும் வாக்கிங் போவது வழக்கம். அப்போது முதல்வரும் இருந்தார். உடனே அவரை சந்தித்து நலம் விசாரித்தேன்" என்றார் ஓபிஎஸ். இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்த பிறகு முதல்வர் ஸ்டாலினை, வீட்டில் ஒருமுறை ஓபிஎஸ் சந்தித்தார். அன்றைய தினமே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ் உள்ளிட்டோரும் முதல்வரை சந்தித்தனர். ஓபிஎஸ், பிரேமலதா ஆகிய இருவரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததன் பின்னணியில் கூட்டணி அமைவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என திமுக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் , "பின்னணியும் இல்லை, முன்னணியும் இல்லை, ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால் அரசியல் பண்பாட்டுடன் வந்து பார்த்துச் சென்றார்கள். அவ்வளவுதான்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications