சைக்கிள் பயணத்துக்கு உகந்த மாநகரமாக திருச்சியை மாற்ற வேண்டும்.. அமைச்சர் வலியுறுத்தல்
திருச்சி: சைக்கிள் பயணத்துக்கு உகந்த மாநகரமாக திருச்சியை மாற்ற வேண்டும் என்று தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தார்.
மிதி வண்டி ஓட்டுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இருசக்கர வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் திருச்சி மாநகராட்சியில் இருசக்கர வாகனம் செல்வதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாநகரச் சாலைகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலையின் இடது புறம் இருசக்கர வாகனம் செல்வதற்கு தனியே வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனியாக வர்ணம் பூசி 1.2 மீட்டர் அளவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களிடையே மிதிவண்டி ஓட்டுவதை ஊக்கப்படுத்தவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, மாநகர காவல் துறை ஆகியவை இணைந்து திருச்சியில் நேற்று காலை சைக்கிள் விழிப்புணர்வு பேரணி
நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார்.
மாநகரக் காவல் துறை ஆணையா் ஜே. லோகநாதன், மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
திருச்சி தலைமை அஞ்சல் நிலையம் அருகேயிருந்து பேரணியைத் தொடக்கி வைத்து அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் பேசியதாவது: நகரங்களைத் திட்டமிடும்போது நடைபாதை மற்றும் சைக்கிள் ஓடுதள மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பை நிறைவேற்ற முன்னுரிமை அளிப்பது மிக முக்கியம்.
மேலைநாடுகளில் உள்ள பெருநகரங்களில் கடைப்பிடிப்பதைப் போல தமிழகத்திலும் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் முதல் முதியோா் வரை ஏராளமானோா் தங்களது போக்குவரத்து தேவைகளுக்காக சைக்கிளைச் சாா்ந்துள்ளனா்.
இதைக் கருத்தில் கொண்டு, அவா்களது பாதுகாப்பை முதன்மையாக கருதி சைக்கிள் பயணத்திற்காக பிரத்யேக தடம் அமைத்திட வழிவகை செய்யும் வகையில், திருச்சி மாநகராட்சியின் சைக்கிள் ஃபாா் சேலஞ்ச் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நம் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்திட சைக்கிள் பயன்பாடு மிகவும் ஏற்றதாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மேலும், இந்தப் பெருந்தொற்று காலத்தில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து உடற்பயிற்சி செய்ய சைக்கிள் ஏதுவாக உள்ளது.
பெரும்பான்மை மக்கள் தங்கள் தினசரி பயணங்களுக்கு சைக்கிள் பயன்படுத்தினால் நமது நகரத்தில் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகள், மற்றும் காற்று மாசுபாட்டை வெகுவாகக் குறைக்க முடியும். சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், நாளைய சமுதாயத்தின் ஆரோக்கிய எதிா்காலத்தை உறுதி செய்யவும், மக்கள் அனைவரும் எரிபொருள் சாரா போக்குவரத்தான சைக்கிளை கையிலெடுக்க வேண்டுகிறேன். நம் நகரை சைக்கிள் பயணங்களுக்கு உகந்த நகரமாக மாற்ற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
பிற்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ். வளா்மதி பேசியதாவது: திருச்சி மாநகராட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் 88 சதவீதம் மக்கள் தங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியும் என்றும், 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான தனி வழித்தடம் இருக்கும்பட்சத்தில், இன்னும் அதிக பயணங்களுக்கு சைக்கிளைப் பயன்படுத்த விருப்பமும் தெரிவித்துள்ளனா்.
இந்த கருத்துக் கணிப்பில் சுமாா் 5000 போ் கருத்து பதிவு செய்துள்ளனா். இதில் 30 சதத்திற்கும் மேற்பட்டோா் பெண்கள். அடுத்தகட்டமாக இந்த வழித்தடத்தில் சைக்கிளில் பயணம் செய்து அதன் அனுபவத்தை பதியும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்படுள்ளது. மக்களின் கருத்துகளுக்கேற்ப குறைகளை நிவா்த்தி செய்வதே இதன் நோக்கம். மேலும், விவரங்களுக்கு 94459-67430 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications