கொரோனா.. திருச்சி நடமாடும் தள்ளுவண்டி காய்கறி கடைகள்.. ஆணையர் தகவல்
திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சி மூலம் நடமாடும் தள்ளுவண்டி காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளது என ஆணையர் சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார்.
Recommended Video
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மளிகை கடைகள், பால் கடைகள், மருந்தகங்கள், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறுமின்றி அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் எளிதில் கிடைக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைக்க மாநகரம் முழுவதும் சுமார் 65 வார்டுகளிலும் வார்டு ஒன்றுக்கு ஒரு தள்ளுவண்டி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நடமாடும் காய்கறிகள் விற்பனை துவங்கப்படவுள்ளன.
இந்த நடமாடும் காய்கறி தள்ளுவண்டிகள் செல்லும் பணியாளர்கள் கையுறை, முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொண்டு விற்பனை செய்வார்கள் என்று ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தார்.