கல்குவாரி ஓனரிடம் பணம் கேட்டு மிரட்டல்! நாம் தமிழர் நிர்வாகிகளை தூக்கிய திருச்சி போலீஸ்! வார்னிங்
திருச்சி: திருச்சியில் கல் குவாரி உரிமையாளரிடம் இரண்டு லட்சம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் யூட்யூப் சேனலில் வீடியோ வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலரிடம் அவர்கள் பணம் பறித்து வந்ததாகவும் பகீர் புகார் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் புலிவலம் கரட்டாம்பட்டியில் அரசு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு அனுமதியோடு மதுராபுரியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் டிஎஸ்கே என்ற பெயரில் கல்குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்து இந்த கல்குவாரியை அவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் மண்ணச்சநல்லூர் தொகுதி இணை செயலாளரான அருண்குமார், மேற்கு தொகுதி செயலாளரான செல்லத்துரை, நாம் தமிழர் கட்சி உறுப்பினரான ராஜாங்கம் ஆகியோர் கடந்த மூன்றாம் தேதி டிஎஸ்கே கல்குவாரிக்கு சென்றுள்ளனர்.
அங்கு இருந்த தங்கவேலிடம் உரிய அனுமதியின்றி கல்குவாரி நடந்து வருவதாகவும், எனவே இரண்டு லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது, தொடர்ந்து பணம் தர முடியாது என தங்கவேல் கூறியுள்ளார். இதனையடுத்து அருண்குமார், செல்லத்துறை, ராஜாங்கம் உள்ளிட்ட ஏழு பேர் அக்டோபர் 4ஆம் தேதி கல்குவாரிக்கு நேரில் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும் கரிகாலன் வலையொலி என்ற யூட்யூப் சேனலில் திருச்சி மாவட்டம் கரட்டாம்பட்டியில் அரசு அனுமதியின்றி கல்குவாரி இயங்கி வருகிறது.
இதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து தங்கவேல், புலிவலம் காவல் நிலையத்தில் அக்டோபர் 13ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த புலிவலம் காவல் நிலைய போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருண்குமார், செல்லத்துரை, ராஜாங்கம், மற்றும் ஆனந்தன்,தனபால், வினோத், கேமராமேன் ஆகிய ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் செல்லத்துரை ராஜாஜங்கம் ஆகியோரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நாம் தமிழர் நிர்வாகி அருண்குமார், ஆண்டன், வினோத், கேமரா மேன் ஆகியவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக திருச்சி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நேற்று (13.10.2024)-ஆம் தேதி மேற்படி TSK கல்குவாரியின் உரிமையாளர் தங்கவேல், புலிவலம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 1.அருண்குமார். 32/24, த.பெ.பழனிச்சாமி. (இணை செயலாளர், நாம் தமிழர் கட்சி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி) 2.செல்லதுரை, 35/24. த.பெ.தர்மலிங்கம் (மண்ணச்சநல்லூர் மேற்கு தொகுதி செயலாளர், நாம் தமிழர் கட்சி), 3.ராஜாங்கம்,32/24. த.பெ.சுப்ரமணி (உறுப்பினர். நாம் தமிழர் கட்சி) மற்றும் அதே கட்சியை சேர்ந்த சிலர். தன்னை பணம் கேட்டு மிரட்டி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் புலிவலம் காவல் நிலையத்தில் குற்ற எண். Cr.No. 122/24, U/s 296(b), 351(3) BNS r/w 67 IT Act- ன் படி வழக்கு பதிவு செய்து, A2. செல்லதுரை, 35/24. த.பெ.தர்மலிங்கம் மற்றும் A3-ராஜாங்கம்.32/24. த.பெ.சுப்ரமணி ஆகியோரை இன்று (14.10.2024)-ஆம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
மேலும் வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளான A1.அருண்குமார். 32/24. த.பெ.பழனிச்சாமி. A4.கேமராவில் படம் எடுத்தவர். A5.ஆனந்தன், A6.தனபால், A7.வினோத் மற்றும் மேற்படி மிரட்டல் வீடியோவை பதிவு செய்த நபர் ஆகியோரை தேடப்பட்டு வருகிறது. இதுபோன்ற, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபவர்களை பற்றிய தகவல்களை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் 9487464651 (Helpline) எண்ணிற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications