நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது.. சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை தாக்கிய வழக்கில் ஆக்ஷன்
திருச்சி: மணப்பாறையில் சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை தாக்கி, இளம்பெண்ணை கடத்திச் சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் கடந்த 14 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்து கொள்வதற்காக மதுரையில் தங்கி உள்ளனர். பெண்ணின் உறவினர்கள், அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. அதே ஊரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், பெண்ணின் உறவினருமான வழக்கறிஞர் அருணகிரி ஒரு கும்பலுடன் மதுரைக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவர், தனது உறவுக்கார கல்லூரி மாணவியை திருமணம் செய்ய முயன்ற மாணவர் சந்தோஷை காரில் கடத்தி கொடூரமாக தாக்கி உள்ளார். பின்னர் சந்தோஷை வழியிலேயே இறக்கி விட்டு அந்தக் கும்பல் அந்தப் பெண்ணை அழைத்து சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வளநாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து சந்தோஷிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருணகிரி தங்களை தாக்கி, தன்னை சாதி ரீதியாக திட்டியதுடன் இருவரையும் தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச் சென்றதாக அந்த மாணவர் குற்றம்சாட்டிய நிலையில், அருணகிரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவருடன் சென்ற கார்த்தி, பிரவீன் உள்ளிட்ட மேலும் 3 பேரையும் வளநாடு போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருணகிரி, பிரவீன், கார்த்தி, சாமிக்கண்ணு உள்ளிட்ட 3 பேரையும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நாதக நிர்வாகி உள்ளிட்ட 4 பேரையும் செப்டம்பர் 30 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவர்கள் 4 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அருணகிரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications