பொதுச் செயலாளர் பதவி கேட்டீங்க கொடுத்தாச்சு! எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்
திருச்சி: மீண்டும் 3-ஆவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி வருவார், அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என திருச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி விஎஸ்எம் மஹாலில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒ. பன்னீர்செல்வம் அணி திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி கேட்ட முதல்வர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளை கொடுத்து விட்டோம். தேர்தலில் முறைப்படி ஏற்கெனவே பாஜகவுடன் இருப்பதாக தெரிவித்து விட்டோம்.
கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை இந்திய நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. மேலும் மூன்றாவது முறையாக இந்திய நாட்டின் மோடி அவர்கள் பிரதமராக வருவார் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். திருச்சிக்கு வருகை தந்த பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தேன். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
மேலும் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணமும் அதுவே. ஏன் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றுசேர விட மாட்டேங்கிறார் என கேள்வி அனைவரும் மனதில் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்துடன் செயல்படுகிறார். 50 ஆண்டு கால அதிமுகவின் சட்ட விதிகளை பின்பற்றிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த இயக்கம் இது. எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருப்பவர்கள் பலர் என்னிடம் மறைமுகமாக பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய மன வேதனையையும், வருத்தத்தையும் தெரிவித்தார்கள்.
நாங்கள் என்ன சொன்னாலும் அதை எடப்பாடி பழனிச்சாமி பொருட்படுத்த மாட்டேங்கிறார். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக தேர்தல் நேரத்தில் மூன்று மாதங்களில் விசாரணை நடத்தி உரிய குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்படும் என தெரிவித்தார்கள் ஆனால் இதுவரை எதுவும் நடைபெறவில்லை. ஏன் அதிமுக அனைவரும் ஒன்றிணைய மாட்டார்கள் என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்.
இந்திய நாட்டில் இருக்கக்கூடிய அனைவரின் எண்ணமும் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதே ஆகும். இந்திய கூட்டணி பற்றி நிருபர் கேட்ட கேள்விக்கு ஆண்டிகள் கூடி கட்டிய மடம் தான் அது. தேர்தல் நேரத்தில் இறைவன் கொடுத்த சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். நாங்கள் மீண்டும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளோம்.
பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று, சட்டப்படி என்ன தீர்ப்பு வந்தாலும் அதை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வோம். எங்களுடைய இலக்கு நியாயமானது அதை நோக்கி நாங்கள் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம். என் மீது எத்தனை அடிகள் விழுந்தாலும் நான் பந்து போன்று மீண்டும் மீண்டும் எழுந்தரித்துக் கொண்டே இருப்பேன்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் ஒன்றிணைவது, கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது, இவை எல்லாம் உரிய நேரத்தில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications