திடீர் "ராணி" ஆனதும் திமிர்.. கேஆர்.விஜயா நடித்த படத்தின் கதையை சொல்லி விமர்சித்த வைத்திலிங்கம்!
திருச்சி : ஓபிஎஸ் அணி மாநாட்டில் உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், "ஆயிரம் எடப்பாடி பழனிச்சாமி வந்தாலும், ஒரு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஈடாகாது. எடப்பாடி பழனிசாமியின் திமிரை தொண்டர்கள் அடக்குவார்கள்" எனத் தெரிவித்தார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு கட்சிக்கு உரிமை கொண்டாடினர். இந்த அதிகாரப் போட்டியில் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சியைக் கைப்பற்றியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அணியினர் நடத்திய பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

இதற்கிடையே தங்களுக்கு தொண்டர்களின் ஆதரவு இருப்பதை காட்டும் வகையில் திருச்சியில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
ஓபிஎஸ் படை : இந்த மாநாட்டில் பேசிய ஓபிஎஸ்ஸின் வலதுகரமான வைத்திலிங்கம், "பார் சிறுத்ததால் படை பெருத்ததோ, படை பெருத்ததால் பார் சிறுத்ததோ என்று பாரதிதாசன் கூறுவார். அதுபோல் 'திருச்சி சிறுத்ததால் ஓபிஎஸ் படை பெருத்ததோ; ஓபிஎஸ் படை பெருத்ததால் திருச்சி சிறுத்ததோ' என்ற வரிகளுக்கு ஏற்ப வங்கக் கடலும் அரபிக்கடலும் இந்து மகா சமுத்திரமும் ஒன்றாக சங்கமித்தது போல் மக்கள் கடல் இங்கே திரண்டு இருப்பதை பார்க்கும்போது ஆயிரம் எடப்பாடி வந்தாலும் ஒரு ஓ.பன்னீர்செல்வத்திற்கு சமம் இல்லை என்பது தெரிகிறது.
இந்தக் கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களை மதிக்காதவன் அழிந்து போவான். நிச்சயமாக இதற்கு தர்மம் பதில் சொல்லும். மலை குலைந்தாலும் நிலை குலையாமல் மாண்போடு இருக்கின்ற ஓபிஎஸ், நாலு பக்கமும் இருந்து அம்புகள் வந்தாலும் புன்னகையால் அதை சிதறடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர். பொறுமைக்கு எடுத்துக்காட்டு ஓபிஎஸ் என ஜெயலலிதா சொன்னார். ஒரு பதவியை ஒருவரிடம் கொடுத்துவிட்டால் திருப்பிக் கொடுப்பார்களா? இருக்காது என்பது வரலாறு. அதை திருப்பிக் கொடுத்தவரே ஓபிஎஸ்தான் என்று ஜெயலலிதா சொன்னார்.
சரஸ்வதி சபதம் : ஒருமுறை அல்ல மூன்றுமுறை கொடுத்த முதலமைச்சர் பதவியை திருப்பிக் கொடுத்த பரதன் ஓபிஎஸ். சரஸ்வதி சபதம் என்ற படத்தில் கே.ஆர்.விஜயா பிச்சைக்கார பெண்ணாக நடிப்பார். அவருக்கு யானை மாலையிட்டதால் அவர் ராணி ஆவார். ராணி ஆனவுடன் திமிர் அதிகமாக இருக்கும். அதை அடக்குவார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமியின் திமிரை தொண்டர்கள் நீங்கள் தான் அடக்க வேண்டும்.
ஜெயலலிதாவிற்கும், எம்.ஜி.ஆருக்கும் யார் துரோகம் செய்தாலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள். எம்ஜிஆர் வகுத்த விதிகளை, ஜெயலலிதா கட்டிக் காத்த விதியை காலில் மிதித்து, ஜெயலலிதா தான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்பதை ரத்து செய்த எடப்பாடி பழனிசாமிக்கு நாம் தண்டனை கொடுத்தாக வேண்டும்.
கோடநாடு குற்றவாளி : இன்று எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். கோடநாடு கொள்ளை நடந்த நாள் ஏப்ரல் 24 இன்று. 2017 ஏப்ரல் 24ஆம் தேதி தேதிதான் அது நடந்தது. அந்த நாளில் தான் இந்த மாநாடு நடக்கிறது. அந்த குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் இறைவன் தண்டிப்பான்" என ஆவேசமாகப் பேசினார் வைத்திலிங்கம்.












Click it and Unblock the Notifications