பறக்க மறுத்த விமானம்.. தரையிறங்கிய பயணிகள்.. உதவிக்கு வந்த ஊழியர்கள்.. வாசகரின் அனுபவம்
திருச்சி: திருச்சியிலிருந்து கடந்த 2ம் தேதி சிங்கப்பூர் செல்லவிருந்த ஸ்கூட் விமானம் என்ஜின் பழுது காரணமாக பறக்க முடியாமல் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தான் சந்தித்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார் நமது வாசகர் கவிதா கந்தப்பன்.
டிசம்பர் 2ம் தேதி அதிகாலையில் திருச்சியிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஸ்கூட் நிறுவன விமானம் 150 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் தயாராக இருந்தது. 1. 35 மணிக்கு விமானம் கிளம்ப வேண்டும். டேக் ஆப் ஆக வேண்டிய ஆயத்த நிலையில் விமானம் இருந்த நிலையில் விமானம் பறக்க இயலவில்லை. என்ஜின் பழுது கண்டுபிடிக்கப்பட்டு விமானம் ஓரம் கட்டப்பட்டது.
பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டனர். ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். மாற்று ஏற்பாடுகளுக்குப் பின்னர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விமானத்தில் பயணித்தவர்களில் சான்பிரான்சிஸ்கோவில் வசித்து வரும் நமது வாசகர் கவிதா கந்தப்பனும் ஒருவர். தனது மகளுடன் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லவிருந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் தான் சந்தித்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார் கவிதா கந்தப்பன். அவரது வார்த்தைகளிலேயே அந்த அனுபவத்தைப் பார்ப்போம்...
விமான என்ஜின் பழுது என்பது தினசரி நடக்கக் கூடியதல்ல. எப்போதாவது நிகழக் கூடியது. டிசம்பர் 2ம் தேதி 1.35 மணி இருக்கும். நாங்கள் முற்றிலும் எதிர்பாராத அனுபவத்தை சந்தித்தோம். மிகப் பெரிய அபாயத்திலிருந்து பைலட்டுகள் எங்கள் 150 பேரையும் காப்பாற்றிய செயலை நினைத்தால் இப்போதும் திகிலாக இருக்கிறது.
இதுபோன்ற சமயங்களில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள்தான் பயணிகளை பார்த்துக் கொள்ள வேண்டும். அதை ஸ்கூட் ஊழியர்கள் திறம்பட செய்தார்கள். அவர்களது சேவையை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். நள்ளிரவைத் தாண்டிய நேரம், வெறிச்சோடிக் கிடந்த விமான நிலையம், எங்கு போவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு நாங்கள்.
ஏமாற்றம், கோபம், விரக்தி, உதவிக்கு ஆள் இல்லாமை என கலவையாக பயணிகள் நின்று கொண்டிருந்தோம். ஆனால் ஸ்கூட் ஊழியர்கள் எங்களை ஆசுவாசப்படுத்தினர். அருமையாக ஒருங்கிணைத்து உதவி செய்தனர். நாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கூறினார்கள். எங்களை அமைதிப்படுத்தினார்கள்.
குறிப்பாக திருமதி உஷா, கார்த்திக், செர்ஷீன் ஆகியோரும், மற்றவர்களும் பொறுமையாக செயலாற்றினார்கள். பயணிகளை தங்குமிடத்திற்கு அனுப்பி வைத்தனர். நானும் எனது மகளும் மட்டுமே உடனடியாக சிங்கப்பூர் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். காரணம் நாங்கள் சான்பிரான்சிஸ்கோவில் இணைப்பு விமானத்தை பிடிக்க வேண்டியிருந்தது. எனவே எங்களுக்கு அடுத்த விமானத்தில் டிக்கெட் புக் செய்து கொடுத்தனர். அன்று இரவு ஹோட்டல் ரம்யாஸில் நாங்கள் நிம்மதியாக தங்கவும் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
என்ஜின் பழுதிலிருந்து நாங்கள் தப்பியது பெரிய அதிர்ஷ்டம்தான். விமான நிலைய சுவர் மீது மோதாமலும் தப்பினோம்!. மக்களுடன் கலந்து பேசும் ஒரு நல் வாய்ப்பாகவும் இது எனக்கு அமைந்தது. திருச்சியிலிருந்து மீண்டும் விமானத்தில் பயணிப்பீர்களா என்று என்னிடம் யாராவது கேட்டால் கட்டாயம் ஆமாம் என்று கூறுவேன் என்று கூறியுள்ளார் கவிதா கந்தப்பன்.