வார்னிங்.. வேகம் எடுக்கும் கொரோனா செகண்ட் வேவ்.. வேறு வழியே இல்லை.. மீண்டும் மாஸ்க்கை எடுங்க மக்களே!
திருச்சி: முககவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவசியம் என்றும், எவ்வித அறிகுறியும் இன்றி கொரோனா வைரஸ் பரவி வருவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்திலும் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளது. முக்கியமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
மார்ச் மாதத் தொடக்கத்தில் ஒற்றை இலக்க எண்ணில் இருந்த பாதிப்பு கடந்த இரண்டு, மூன்று தினங்களாக இரட்டை இலக்க எண்ணிற்கு உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

தொற்று
இதையும் மீறி திருச்சியில் உள்ள 2 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் கல்லூரி ஆகியவற்றில் மாணவ- மாணவிகளுக்கு தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருச்சி
இதேபோல திருச்சி அருகே சேதுராப்பட்டியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வரும் மாணவ-மாணவிகள் 10 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம் கணேஷ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கல்லூரிக்கு சென்று நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

விடுமுறை
இதனை தொடர்ந்து சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாக கல்லூரி முதல்வர் சாந்தி தெரிவித்தார். இதன் காரணமாக கல்லூரி மூடப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மாணவ- மாணவிகள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து 12 பேர் நேற்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வனிதா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் சென்னை மருத்துவ கல்வி இயக்கக இயக்குனர் டாக்டர் நாராயணபாபு கலந்து கொண்டு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.

கொரோனா
மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு மருத்துவக் கல்லூரி முதல்வா் வனிதா முன்னிலையில் கொரோனா சிறப்பு வாா்டு, கொரோனா தடுப்பூசி முகாம் பிரிவுகளில் நோயாளிகளுக்கு வசதிகள், போதிய தடுப்பூசி, கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் அனைத்தும் இருப்பில் உள்ளதா எனக் கேட்டறிந்தாா்.தொடா்ந்து, தொற்று ஏற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம், கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

அறிவுறுத்தால்
நிறைவாக, சென்னை, கோவை பகுதிகளில் கொரோனா அதிகரித்துள்ளதால் திருச்சி மாவட்டத்திலும் மருத்துவா்கள், முன்களப்பணியாளா்கள், போதிய மருந்துகள், படுக்கைகள் என அனைத்தும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தினாா். ஆய்வின்போது அரசு மருத்துவமனை கொரோனா தடுப்பு பிரிவு மருத்துவ குழுவினா், முன்களப்பணியாளா்கள் உட்பட பலா் உடனிருந்தனா்.

தடுப்பு மருந்து
பின்னர் சென்னை மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு செய்தியாளரிடம் கூறியதாவது: திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 200 முதல் 250 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8,267 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருச்சி சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 237 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொற்று
அவர்களில் 14 மாணவர்கள், ஒரு பேராசிரியர் என மொத்தம் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் எவ்வித அறிகுறியும் இன்றி பரவியுள்ளது. தற்போது திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் தொற்றால் பாதிக்கப்பட்டு 36 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர்களுக்கு வீரியம் இல்லாத கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கட்டாயம்
கடந்த காலங்களை ஒப்பிடுகையில் கொரோனா தாக்கம் குறைவாகவேதான் உள்ளது. இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. ஆனாலும் கொரோனா தடுப்பூசி அனைவரும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும். அதே வேளையில் முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் அவசியமாகும். இவ்வாறு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications