திருச்சி அருகே பட்டா இருந்தும் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் மக்கள்.. என்ன காரணம்?
திருச்சி: திருச்சி அருகே 10 ஆண்டாக நிலத்தை அளந்து கொடுக்காததால் பட்டா இருந்தும் வீடு கட்டமுடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இதுபற்றி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தனர். 2015-ம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவில் ஒரு சிக்கல் வந்துள்ளது. யாருக்கு எந்த இடத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியாமல் தவிக்கிறார்கள்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜலட்சுமி தலைமையில் திங்கள்கிழமையான நேற்று நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்தனர்.

பலர் வீட்டுமனைப் பட்டா,மகளிர் உரிமை தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, முதியோர் உதவி தொகை மற்றும் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய சாலை பணிகள், வடிகால் வசதிகள் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 644 பேர் மனுக்கள் கொடுத்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமையில் தொட்டியம் மற்றும் குளித்தலை தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், "கடந்த 2015-ம் ஆண்டு தொட்டியம் கொசவம்பட்டியில் அனைத்து சமூகத்தை சேர்ந்த 194 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 29 பேருக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவுக்கு மட்டும் உரிய நிலத்தை இதுவரை அளந்து கொடுக்கவில்லை. மற்ற அனைத்து சமூகத்தினருக்கும் அளந்து கொடுத்து விட்டார்கள்.
இதனால் தங்களுக்கு உரிய இடம் எது என்று தெரியாமல் வீடு கட்டி குடியிருக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனே நிலத்தை அளந்து கொடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்ட தலைவர் சிராஜுதீன் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறுகையில், 2023-24-ம் ஆண்டில் இருந்து இன்று வரை திருச்சி மாவட்டத்தில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயது பாரபட்சமின்றி மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது. மாநகர் முழுவதும் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு என்பது ஒரு பக்கம் ஏற்பட்டாலும் அதை சார்ந்த பல்வேறு மர்ம காய்ச்சலும் பரவ ஆரம்பித்துள்ளது. எனவே திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மையான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கவும், நோய் பரவலை கட்டுப்படுத்தவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications