திருச்சியில் கருஞ்சட்டை பேரணி… பெரியார் முழக்கங்களுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருச்சி : பெரியார் நினைவு தினத்தையொட்டி திருச்சியில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற கருஞ்சட்டை பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.
சாதி, ஏற்ற தாழ்வை போக்கி, சமூக நீதியை நிலை நிறுத்தி, மூட நம்பிக்கைகளை ஒழித்து தன்மானத்தோடு ஒவ்வொரு மனிதனும் வாழ வேண்டும் என இறுதிவரை போராடியவர் தந்தை பெரியார்.

ஆனால் பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும் அவருக்கு எதிராகவும், அவரது கொள்கைகளுக்கு எதிராகவும் சிலர் தற்போதும் தமிழகத்தில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், தந்தை பெரியாரின் நினைவுதினம் நாளை அனுசரிக்கப் படுகிறது. அவரது நினைவு தினத்தையொட்டி பெரியார் சிந்தனைகளை விளக்கும் வகையில் கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாட்டுக்கு திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த பேரணி மற்றும் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மே 17 இயக்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளன.
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். அரசியல் சார்பற்ற பெரியாரிய அமைப்புகள் பேரணியில் பங்கேற்றன.
பறையிசை முழங்க, கருப்பு சட்டை அணிந்த ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பெரியாரிய முழக்கமிட்டவாறே ஊர்வலமாக சென்றன. பேரணியை முன்னிட்டு திருச்சி நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications