"ரைஸ்".. என்னங்க இப்படி பேசுறீங்க.. கோபத்தில் பொங்கிய ராமதாஸ்.. அவன் தலையிலேயே போடு.. சீற்றம்!
வீட்டில் ஆங்கிலம் கலந்து கலந்து பேசாதே, என்று ராமதாஸ் இந்த நிகழ்வில் குறிப்பிட்டார்.
திருச்சி: தமிழ் மொழியைக் காப்பதற்காக தமிழைத் தேடி என்ற தலைப்பில் பாமக ராமதாஸ் நடத்தும் பயணம் கவனம் பெற்றுள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் அவர் காட்டமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் காப்பதற்காக தமிழைத் தேடி... என்ற தலைப்பில் பாமக சார்பாக அதன் நிறுவனர் பயணம் மேற்கொண்டு உள்ளார். 28ம் தேதி வரை இந்த பயணம் நடக்க உள்ளது. மதுரையில் இந்த பயணம் முடிய உள்ளது.
தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த பயணத்தை ராமதாஸ் மேற்கொண்டு உள்ளார். இந்த பயணம் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது.

அறிக்கை
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்' என்பது தான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை; ஆலயங்களில் தமிழ் இல்லை; உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை; வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை; வீடுகளில் தமிழ் இல்லை; தாய்க்கும் சேய்க்குமான உரையாடல்களில் தமிழ் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பமாகவும், நோக்கமாகவும் உள்ளது, என்று கூறினார்.

மொழிகள்
சென்னையில் தொடங்கிய இந்த பயணம் சிதம்பரம் வழியாக தற்போது திருச்சிக்கு வந்தடைந்து உள்ளது. இதில் பேசிய ராமதாஸ், உலகில் தொன்மையான மொழி தமிழ்தான். உலகில் மொத்தம் 7015 மொழிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 880 மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. ஏகப்பட்ட மொழிகள் அழிந்துவிட்டன. பழைய மொழிகள் பல மொத்தமாக அழிந்துவிட்டன. 2000 மொழிகளை பேச ஆள் இல்லை. குறைவான மக்கள் மட்டுமே 2000 மொழிகளை பேசுவதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. இது எல்லாம் அழியும் நிலையில் இருக்கின்றன. இந்தியாவில் இப்படி அழியும் நிலையில் மொழிகள் உள்ளன.

அழியும் நிலை
இந்தியாவில் 220 மொழிகள் அழியும் நிலையில் இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது. தமிழும் அழிந்துவிடும் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு இருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகளில் தமிழ் அழிந்துவிடும் என்று ஒரு கூட்டம் சொல்லிகொண்டு இருக்கிறது. 100 ஆண்டுகளில் அழியும் மொழிகளில் தமிழ் எட்டாவது இடத்தில் இருப்பதாக ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் நம்ப கூடாது. ஏனென்றால் அதை யுனெஸ்கோ அமைப்பு சொல்லவில்லை. இந்தி, ரஷ்யா உள்ளிட்ட 13 மொழிகள் தான் 100 கோடிக்கும் அதிகமான மக்களால் பேசப்படுகிறது. தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும் அதை இத்தனை பேர் பேசுவது இல்லை.

தமிழ்
தமிழ் மொழியை காக்க அதன் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக கடைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். மக்கள் தமிழில் பேச வேண்டும். நான் எந்த மொழிக்கும் எதிராக இல்லை. எந்த மொழியில் பேச வேண்டும் என்றாலும் பேசு. தமிழில் பேசும் போது தமிழில் மட்டுமே பேசு. ஆங்கிலத்தை கலக்க வேண்டாம். வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் கலந்து பேசாதே. கிராமத்தில் கூட வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம் பேசுகிறார்கள். ஏய் Rice எடுத்துட்டுவா.. Rice-ன்னா, அரிசி.. எடுத்துட்டு வந்து அவன் தலையிலேயே போடு. வீட்டில் ஆங்கிலம் கலந்து கலந்து பேசாதே, என்று ராமதாஸ் பேசினார். இதை பேசும்போது பாமக நிறுவனர் ராமதாஸ் கடுப்பாக விமர்சனம் வைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications