திருச்சியில் காதலியை அடித்த புருஷன்.. வீட்டுக்கே சென்ற கள்ளக்காதலன்.. செய்ததை கேட்டு ஆடிப்போன போலீஸ்
திருச்சி : திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் கள்ளக்காதலியின் கணவனை நயவஞ்கமாக அழைத்து வெட்டி கொன்றுவிட்டு, அதனை போன் போட்டு காதலிக்கு சொன்ன தனியார் நிறுவன மேனேஜரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ குமரேசபுரத்தைச் சேர்ந்த 48 வயதாகும் சரவணன், பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சவுந்திரவள்ளிக்கு 45 வயது ஆகிறது. சரவணன் சவுந்திரவள்ளி தம்பதிக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள். சவுந்திரவள்ளி திருச்சி திருவெறும்பூரில் உள்ள டெக்கரேசன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார்.

இவர்களது 3 மகள்களில் ஒரு மகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இன்னொரு மகள் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலிரியாக பணியாற்றி வருகிறார்.கடைசி மகள் திருவெறும்பூரில் உள்ள ஐ.டி.ஐ.யில் படித்து வருகிறார்.
சவுந்திரவள்ளி வேலை செய்யும் நிறுவனத்தில் லால்குடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (52) என்பவர் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சவுந்திரவள்ளிக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த விவகாரம் சரவணனுக்கு ஒரு கட்டத்தில் தெரியவந்துள்ளது. இதனால் சவுந்திரவள்ளி உடன் சரவணன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த சவுந்திரவள்ளி, தனது கடைசி மகளை அழைத்துக்கொண்டு சென்னையில் உள்ள இரண்டு மகள்களை பார்க்க சென்று விட்டார். வீட்டில் சரவணன் மட்டும் தனியாக இருந்திருக்கிறார். இதனிடையே சவுந்திரவள்ளியை அடித்ததால் ராதாகிருஷ்ணன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு ராதாகிருஷ்ணன் மதுபாட்டில்களுடன் சரவணன் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் நயவஞ்சகமாக பேசி சரவணனுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளார். இருவரும் வீட்டில் அமர்ந்து மது அருந்தி இருக்கிறார்கள். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக சரவணன் நேரடியாகவே ராதாகிருஷ்ணனிடம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் அரிவாளால் சரவணனை சரமாரியாக வெட்டினாராம். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் சென்னை சென்று இருந்த சவுந்திரவள்ளிக்கு போன் செய்து, உனது கணவரை வெட்டிக்கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சவுந்திரவள்ளி திருவெறும்பூர் போலீசாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டு கிடந்த சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து லால்குடியில் பதுங்கி இருந்த ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications