ராகுல் இப்போதே பிரதமராக அவசியம் இல்லையே.. இன்னும் காலம் இருக்கிறது.. திருநாவுக்கரசர்
திருச்சி: திருச்சி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் தே.மு.தி.க. வேட்பாளரை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றுள்ளார்.
திருநாவுக்கரசர் 6,21,285 வாக்குகளும் தேமுதிக சார்பில் களமிறங்கிய டாக்டர் வி.இளங்கோவன் 1,61,999 வாக்குகளும் பெற்றனர் திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியில் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால் அங்கு போட்டியிட்ட தே.மு.தி.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் நாட்டின் பல மாநிலங்களில் பாஜக வெற்றி கொடி நாட்டியிருந்தாலும் அதனால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பது மீண்டும் நிரூபமாகியுள்ளதாக குறிப்பிட்டார்

எங்கள் கூட்டணி வலுவானது
தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தான் 37 தொகுதிகளில் வென்றுள்ளனர். இதற்கு காரணம் தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வலுவான நிலையில் இருப்பது தான். தமிழகத்தில் இன்னும் மோடிக்கு எதிரான அலைதான் வீசி வருகிறது என்பதை உணர முடிகிறது என்றார். இனியும் அவருக்கு எதிரான அலை தான் வீசும் என்றார் திருநாவுக்கரசர்

திருச்சி வாக்காளர்களை நினைத்து பெருமை
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் எனக்கு பெருவாரியான வாக்குகளை அள்ளிக்கொட்டி இருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் அமோக வரவேற்பை அளித்து இருக்கிறார்கள். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நான் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் எனக்கு வாக்காளர்கள் அளித்து இருக்கும் ஆதரவு மகிழ்ச்சி அடைய வைத்து இருக்கிறது. திருச்சி வாக்காளர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

ராகுல் இப்போதே பிரதமராக அவசியம் இல்லை
ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்தார்கள். ஆனாலும் அவர்களால் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெறமுடியவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இப்போதே பிரதமராக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவருக்கு இன்னும் வயது இருக்கிறது. அவர் 100 வயது வரை வாழ்வார் என்றார், அவர் நினைத்து இருந்தால் காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் 2-வது முறையாக பிரதமராக அறிவிக்கப்பட்டபோதே அவருக்கு பதிலாக பிரதமர் பதவியை ஏற்று இருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை என்றார்

70 சதவீதத்தை நெருங்கிய வாக்கு பதிவு
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 8 ஆயிரத்து 329. இவர்கள் வாக்களிப்பதற்காக தொகுதி முழுவதும் 1,660 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 8 ஆயிரத்து 329 பேரில் 10 லட்சத்து 37 ஆயிரத்து 750 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். இது 68.80 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.












Click it and Unblock the Notifications