சிறையை விட கொடுமை.. நாங்கள் இறந்தால் அதிகாரிகளே பொறுப்பு! இலங்கை தமிழர் ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம்
திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட ராபா்ட் பயஸ் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை பெற்ற ராபர்ட் பயஸ் புதன்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தாம் உட்பட சாந்தன், முருகன், ஜெயக்குமாரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை கோரி ராபா்ட் பயஸ் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். விடுதலை செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆனபோதும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மூலமாக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு ராபா்ட் பயஸ் மனு அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் தான் அடைத்தார்கள் என உருக்கமாக எழுதியுள்ளார்.
திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ்,ஜெயக்குமார், சாந்தன், முருகனும், அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. மேலும் இங்கு நடை பயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை. சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
மேலும் எனது உடல் நலத்தை சரி செய்ய நடை பயிற்சி செய்ய அனுமதி கேட்டும் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் எனது உடலில் பல நோய்கள் வந்துள்ளது. கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்தபோது ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி, இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால் கடந்த 22.1.2024 அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடை பயிற்சி செய்யவும், விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.
மேலும் இந்த முகாமில் எனது உரிமைகளுக்கோ, உணர்வுகளுக்கோ, எந்த மதிப்பும் இல்லை. அதனால் தான் சாந்தன் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதே நிலை தொடர்ந்தால் நாம் இங்கேயே இறப்பது உறுதி இதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளேன்.
இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி புதன்கிழமை முதல் கால வரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன் என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய கோரியும் சிறப்பு முகாமை இழுத்து மூட கோரியும் நாம் தமிழர் கட்சி தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வருகிற 3-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications