நள்ளிரவு வரை பேசிய சுஜித்.. அதிகாலை முதல் அழுகுரல் கேட்கவில்லை.. அதுதான் மீட்பு படையினரின் கவலை
Recommended Video
திருச்சி: சிறுவன் சுஜித் அழுகுரல் வெளியே கேட்கவில்லை, என்ற தகவல் கண்டிப்பாக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி, கிராமத்தில் நேற்று மாலை 5.40 மணியளவில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார்.
உடனடியாக அவரை மீட்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்களும், வருவாய்த் துறையினரும் நடவடிக்கை எடுத்தனர். இதுதவிர மணிகண்டன், டேனியல், ஸ்ரீதர் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆழ்துளை கிணறிலிருந்து குழந்தைகளை மீட்பதில் வல்லவர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் முயற்சியும் பின்னடைவில் முடிவடைந்தது.
சுஜித்தை காப்பாற்ற விரைந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் குழு.. டிராபிக் நெரிசலில் சிக்கியதால் தாமதம்
பேச்சு கொடுத்தனர்
அதேநேரம், சுஜித் அழும் குரல் வெளியே கேட்டபடிதான் இருந்தது. ஏனெனில் அவர் 30அடி ஆழத்தில் அப்போது சிக்கிக் கொண்டு இருந்தார். எனவே, தாய், தந்தை மற்றும் சில உறவினர்களை வைத்து சிறுவனிடம் பேச்சுக் கொடுத்து அவருக்கு தைரியம் ஊட்டிக் கொண்டே இருந்தனர்.
அதிகாலை
ஆனால் இங்குதான் ஒரு சிக்கல் ஏற்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில், சிறுவன் சுஜித் மேலும் கீழே ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். சுமார் 70 அடி ஆழத்துக்கு குழந்தை சென்றுவிட்டது. இதன்பிறகு சுஜித்திடம் இருந்து வரக்கூடிய அழுகுரல் வெளியே கேட்கவில்லை.
உடல்நிலை
மேலும், கீழே சென்றுள்ளதால் அவரது உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதிலும் சிக்கல் நிலவுகிறது. ஆழம் செல்லச் செல்ல மணலில் உள்ள ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் அது குழந்தைக்கு உடல் வெப்பநிலையை குறைத்து விடும் வாய்ப்பு உள்ளது. இது மற்றொரு சவாலாக பார்க்கப்படுகிறது.
அழுகுரல் கேட்கவில்லை
அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லை என்பதுதான் தற்போது எங்கள் இதயத்திற்கு வலி ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.
காப்பாற்றலாம்
இது தொடர்பாக அங்கே உள்ள மருத்துவ குழுவினர் சிலரிடம் கேட்டபோது, குழந்தை ஒருவேளை மயக்க நிலையில் இருந்தால்கூட அதை மீட்டெடுக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைத்துள்ளோம், என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
தேவை விரைவு நடவடிக்கை
எனவே எவ்வளவு சீக்கிரமாக சுஜித்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கிறார்களோ, அவ்வளவு தூரம் அவரது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்ற கருத்து நிலவுகிறது. இதை நோக்கி தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.