பாலியல் சீண்டல்.. விடாத வேதனை.. திருச்சி ஆசிரியை திடீர் தற்கொலை.. பரபர பின்னணி!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில், பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு உடந்தையாக இருந்ததால், போக்சோ வழக்கில் சிக்கிய பள்ளி ஆசிரியை, மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடம் கற்பிப்பதோடு, அவர்களுக்கு நல்ல ஒழுக்க நெறிகளையும் போதிக்க வேண்டியது ஆசிரியப் பெருமக்களின் கடமை. ஆனால், ஒரு சில ஆசிரியர்கள் பாதை தவறும்போது, அவர்களுடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள், அதனை கண்டிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு, அவர்களின் தவறுகளுக்கு உடந்தையாக இருந்தால், அவர்களும் பாதிக்கப்படுவார்கள். அப்படியொரு சம்பவம், திருச்சியில் அரங்கேறியுள்ளது. ஆசிரியரின் பாலியல் சீண்டலுக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியை ஒருவர், போக்சோ வழக்கில் சிக்கி தன் உயிரிரையே மாய்த்துக்கொண்டுள்ளார்.
நீ எனக்காக பிறந்தவள்.. போலீஸ்காரரின் மகளை மிரட்டி 3 வருடம் பலாத்காரம் செய்த போலி சாமியார்.. ஷாக்
மாணவிகள் மீது பாலியல் சீண்டல்
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரின் மனைவி லில்லி என்பவர், உப்பிலியபுரம் அடுத்துள்ள நெட்டவேலம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள கலிங்கமுடையான்பட்டியைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரும் தமிழாசிரியராக பணிபுரிந்துள்ளார். இவர், 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என்றும் மாணவிகளை மிரட்டியும் வந்துள்ளார். தொடர்ந்து ஆசிரியரின் பாலியல் சீண்டல்கள் அதிகரித்ததால், பாதிக்கப்பட்ட மாணவிகள், ஆங்கில ஆசிரியை லில்லியிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.
ஆசிரியருக்கு உடந்தை
ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறியதும், ஆங்கில ஆசிரியை கொதித்தெழுவார் என எதிர்பார்த்த மாணவிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாலியல் சம்பவத்தை மூடிமறைக்கும் வகையில் ஆசிரியை லில்லி, பாதிக்கப்பட்ட மாணவிகளை மிரட்டியதோடு, புகாருக்கு ஆளான ஆசிரியர் மோகன்தாசுக்கு உடந்தையாகவும் இருந்தாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டத்தில் கைது
பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்பாக குழந்தைகள் நலவாரிய அமைப்பினர், ஆசிரியர் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க, முசிறி அனைத்து மகளிர் போலீசாருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மோகன்தாஸை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் சம்வத்திற்கு உடந்தையாக இருந்த, சக பள்ளி ஆசிரியை லில்லி மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு, மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆசிரியை தற்கொலை
இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்டதால் போக்சோ சட்டத்தில் சிக்கிய ஆசிரியை லில்லி, கடும் மன உளைச்சலால் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மண்ணச்சநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு ஆசிரியை லில்லி சென்றுள்ளார். தனக்கு ஏற்பட்ட இந்த அவமானத்தால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அவர், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்த தகவலின்பேரில், போலீசார் பள்ளி ஆசிரியை லில்லியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலியல் புகாரில் போக்சோ சட்டத்தில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை, அவமானம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மண்ணச்சநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.