ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையே புருவம் உயரச் செய்த செல்ஃபி.. திருச்சி ஏர்போர்ட்டில் ருசிகரம்
திருச்சி: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது. களத்தில் அனல் பறக்கும் சூழலில் கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி கடுமையான கருத்து யுத்தங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்.பி திருச்சி சிவா எடுத்த செல்ஃபி ஒன்று சமூக வலைதள வாசிகளை புருவம் உயர்த்தச் செய்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் நடைபெற இன்னும் சிலபல வாரங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ள சூழல் நிலவுகிறது.

கடந்த சில நாட்களாகவே அரசியல் களத்தில் கருத்து யுத்தங்கள் கடுமையாக நடக்கின்றன. எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சி கூட்டணியும் மாறி மாறி கடுமையான விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு கட்சி தலைவர்களுடன் திமுக எம்.பி. திருச்சி சிவா செல்பி எடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் சந்தித்த நிலையில் அனைவரும் சேர்ந்து செல்பி போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படத்தை விசிக தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "சற்று முன் திருச்சி விமான நிலையத்தில்.. 'முறுவலிக்கும் முரண்கள்'. அண்ணன் திருச்சி சிவா எடுத்த செல்பி" என்று தெரிவித்து பகிர்ந்துள்ளார். திருச்சி சிவா எடுத்த இந்த செல்பி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தேர்தல் திருவிழா களைகட்டும் நேரத்தில், எதிரும் புதிருமாக வார்த்தைப் போர் புரியும் அரசியல்வாதிகள், சிரித்த முகத்தோடு, அருகருகே நின்று செல்பி எடுத்துக்கொண்டுள்ள இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது.












Click it and Unblock the Notifications