என்ன பண்ணாலும் இந்த உலகம் நம்மள உத்து பாக்கனும்! திருமண வரவேற்பில் ’சேவை’! அசத்திய மணமகளின் தந்தை!
திருச்சி: திருச்சி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சேவை மையம் நடைபெற்றது. இந்த விநோத சம்பவம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பொதுவாக திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மணமக்களுக்கு கிப்ட் பாக்ஸ் அல்லது மொய்ப் பணம் வழங்குது வழக்கம். இதற்கு பதிலாக, திருமண நிகழ்ச்சிகளுக்கு வந்தவர்களுக்கு, மணமக்கள் சார்பில், திருமண தாம்பூலப் பைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக இருந்துவருகிறது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, திருச்சியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சேவை மையம் நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி
திருச்சி கருமண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், பார்க்கவகுல முன்னேற்ற சங்க மாநில தலைவர் சத்யநாதன் உடையார் - ஜெனட்ரம்யா தம்பதியரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மணமக்கள் ரோஷிணிராய் - ஜெரோம்ஜோஸ்வா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை, வித்தியாசமான முறையில் நடத்த மணமகளின் தந்தை சத்யநாதன் முடிவு செய்தார்.

விழிப்புணர்வு வாசகம்
அதன்படி, 'வாக்களிப்பதில் பெருமை கொள்வோம்! இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்' என்ற வாசகத்துடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் இலவச சேவை மையத்திற்கும் ஏற்பாடு செய்து அசத்தினார். இந்த மையத்தை, மணமக்கள் திறந்து வைத்து, அனைவரையும் வியப்படைய செய்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், இந்த மையத்தில் இலவசமாக ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக் கொண்டனர்.

ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பு
இதுகுறித்து பேசிய மணமகளின் தந்தை சத்யநாதன், பொதுமக்களுக்கு ஏதாவது விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தாகவும், நீர்நிலை பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, கொரோனா விழிப்புணர்வு போன்றவை ஏற்கெனவே மக்களிடம் சென்றடைந்ததாக தெரிவித்தார். இதனால் தற்போது, மக்களுக்கு தேவைப்படும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது குறித்து விழிப்பணர்வு மக்களிடம் சரியாக சென்றடையாததால், இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பியதாக கூறினார்.

மணமகளின் தந்தை மகிழ்ச்சி
இதற்காக திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் சேவை மையம் நடத்தப்படும் என, திருமண வரவேற்பு அழைப்பிதழிலில் அச்சிட்டு வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக, திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள், இந்த மையத்தில், தங்களது வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைத்துக்கொண்டனர். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மணமகளின் தந்தை சத்யநாதன் பெருமிதம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications