எஸ்கேவுடன் மீண்டும் நடிப்பா? ’சரிசமமான’ கேரக்டர் இருந்தால் மட்டுமே நடிப்பேன்! ஓபனாக பேசிய சூரி!
திருச்சி: குடும்பத்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசுவது மாமன் படத்தின் வெற்றி எனவும், நடிகர் சிவகார்த்திகேயனோடு மீண்டும் காமெடி படத்தில் இணைந்து நடிக்க சொன்னால் அவரே என்னை ஒப்பு கொள்ள மாட்டார் எனவும், அடுத்த படத்தில் இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிப்போம் என நடிகர் சூரி கூறியுள்ளார்.
பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி கதை மற்றும் நடிப்பில், மாமன் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து சூரி திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில், இன்று திருச்சி காவேரி திரையரங்கத்தில் ரசிகர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து, தியேட்டருக்கு படம் பார்க்க வந்திருந்த பெண்கள் மற்றும் ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கிறது என நேரடியாகவே கேட்டு தெரிந்து கொண்டதோடு ரசிகர்களுடன் குழு புகைப்படமும் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூரி, "மாமன்" திரைப்படம் வெளியாவதற்கு முன்பே குடும்பத்தில் நடந்ததை நினைவுபடுத்தும் திரைப்படமாக இருக்கும் என கூறியிருந்தோம். என்ன கூறினோமோ அது தான் தற்பொழுது நடக்கிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்க்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்வதற்காக நேரடியாக திரையரங்கிற்கு வந்திருக்கிறேன்.
"மாமன்" படத்தில் முதல் பாதியில் அதிகமான நகைச்சுவை காட்சியும், இரண்டாம் பாதியில் அதிக உணர்ச்சிபூர்வமான காட்சிகளும் உள்ளது. இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் குடும்பத்தில் நடந்த சம்பவத்தோடு ஒப்பிட்டு பேசுவது "மாமன்" படத்தினுடைய வெற்றியாக உள்ளது. எனது அடுத்த படம் ஆக்சன், எமோஷனல் கலந்த படமாக இருக்கும்.
நடிகர் சிவகார்த்திகேயனோடு மீண்டும் காமெடி படத்தில் இணைந்து நடிக்க சொன்னால் அவரே என்னை அழைத்துக் கொள்ள மாட்டார். அடுத்த படத்தில் இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் இருந்தால் மட்டுமே இருவரும் இணைந்து நடிக்கலாம் என சிவகார்த்திகேயன் ஏற்கனவே என்னிடம் கூறியுள்ளார்.
அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம்.
நகைச்சுவை நடிகராக நடிப்பதை விட கதாநாயகனாக இருக்கும் பொழுது கூடுதல் பொறுப்பு இருப்பதாகவே உணர்கிறேன். என்னுடைய அன்பு தம்பிகள் சினிமாவை கொண்டாடுங்கள். ஆனால் முதலில் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள். யாரிடமும் கோபம் கொள்ளாதீர்கள் நீங்கள் உங்களது உறவினர்களுக்கு போன் செய்து பேசுங்கள், உங்களது கோபம் போய்விடும் உறவு முக்கியம் என்ற சூரி, தனது தம்பியிடம் ஒரு வருடமாக பேச்சுவார்த்தையில் இல்லை.
இந்த திரைப்படம் திருச்சியில் எடுத்த படம். அதனால் திருச்சியில் பெரும்பாலான இடங்கள் இதில் வரும். இந்த தியேட்டரில் தனது இந்த படம் எடுக்கப்பட்டது. அதே தியேட்டரில் தற்பொழுது வெளியாகி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் முதல் பாதியில் காமெடியாகவும் இரண்டாவது பாதி குடும்ப உறவின் முக்கியத்துவம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. விஷால் திருமண தேதி அறிவித்து இருப்பது நல்ல விஷயம் வாழ்த்துக்கள். கண்டிப்பாக மாற்றம் வரும். சைடு ரோல், காமெடி நடிகர், ஹீரோ அடுத்து என்ன? என என்னிடம் கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. எனக்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். நன்றாக போய்க் கொண்டிருக்கிறது அப்படியே போகட்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications