ஓரம்போ.. ஓரம்போ.. எம்.எல்.ஏ வண்டி வருது.. நேற்று முதல்வரிடம் கோரிக்கை.. இன்று நிறைவேற்றம்! அசத்தல்!
திருச்சி : திருச்சி ஓலையூர் சிப்பி நகர் பொதுமக்கள் நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் பேருந்து சேவை கேட்டு மனு அளித்த நிலையில், இன்று அங்கு அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்து பேருந்தை ஓட்டிச் சென்றார் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி.
கே.கே.நகர் - ஓலையூர் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி, டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.
முதல் நாள் கோரிக்கை விடுத்த நிலையில் அடுத்த நாளே நிறைவேற்றப்பட்டதோடு, எம்.எல்.ஏவே பேருந்தையும் ஓட்டியது கண்டு அப்பகுதி பொதுமக்கள் அசந்துபோயினர்.

முதல்வர் ஸ்டாலின் விசிட்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்குச் செல்ல நேற்று திருச்சி வந்தார். அப்போது திருச்சி காட்டூரில் அமைந்துள்ள அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னதாக, திருச்சி விமான நிலைய வளாகத்தில் ஏர்போர்ட், கே.கே.நகர் பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

ஸ்டாலினிடம் மனு அளித்த பொதுமக்கள்
அப்போது கேகே நகர், ஓலையூர் சிப்பி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தனர். அந்த மனுவை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடமும், தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டியிடமும் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உடனே பேருந்து சேவை
vதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில், கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்து சேவையை உடனடியாக வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டது.

அடுத்த நாளே
அதன்படி இன்று காலை ஓலையூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் புதிய வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் அரசு பேருந்து வழித்தடத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பேருந்து, கே.கே.நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஓலையூர் பஸ் நிறுத்தம் வரை தினமும் காலை மாலை என 8 முறை இயக்கப்பட உள்ளது.

சூப்பரா ஓட்டுறீங்க
புதிய வழித்தடத்தில் இயங்கும் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு எம்எல்ஏ பழனியாண்டியே பஸ்ஸை ஓட்டிச் சென்றார். எம்.எல்.ஏ, பேருந்தை ஓட்டிச் செல்வதைக் கண்ட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைதட்டி எம்எல்ஏவை உற்சாகப்படுத்தினர். "சார் சூப்பரா ஓட்டுறீங்க.." என ஒருவர் சொல்ல, கலகலவென சிரித்த எம்.எல்.ஏ பழனியாண்டி, "கேரளால லாரி ஓட்டுவேண்ணா" எனக் கூறினார்.












Click it and Unblock the Notifications