வெளிநாட்டினரை ஈர்த்த திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு.. காளைகளை அடக்கி வீரர்கள் உற்சாகம்
வெளிநாட்டினரை ஈர்த்த திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு.. காளைகளை அடக்கி வீரர்கள் உற்சாகம்
திருச்சி:திருச்சி அருகே சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு உற்சாகமாக நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி பரிசுகளை தட்டிச் சென்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 16 இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் புதிதாக நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ள கிராமங்களுக்கு, ஆய்வு செய்யப்பட்டு அரசின் அனுமதிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளின் படியும், உயர்நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் ஜல்லிக் கட்டு நிகழ்ச்சிகள் பாதுகாப்பான முறையில் நடத்தப்படுகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக பிரசித்திபெற்ற பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
அதற்காக மொத்தம் 500 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு மருத்துவத்துறை சார்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
குழுக்கள் பிரிப்பு
போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனி வண்ண ஆடைகள் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத் துறையினரின் ஆய்விற்கு பிறகு தகுதியான காளைகள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்
ஒரு குழுவினர் குறைந்தபட்சம் 1.30 மணி நேரம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு போட்டிகள் தொடங்கின. போட்டியை திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக கழக செயலாளரும், எம்பியுமான ப. குமார் தொடங்கி வைத்தார்.
யாரும் பிடிக்காத காளை
முதன் முதலாக கோயில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன் பிறகு போட்டியில் பங்கேற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
பாய்ந்த வீரர்கள்
வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் பிடித்து அடக்கினர். ஒருசில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் களத்தில் நின்று விளையாடியது.
காளைகள் முட்டின
வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகள், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் மிரட்டுவதை காண முடிகிறது. சில காளைகள், வீரர்களை ஆக்ரோஷமாக முட்டி தாக்கின. ஜல்லிக்கட்டில் பெரும்பாலான பரிசுகள் காளை வளர்ப்போரே தட்டிச் சென்றனர்.
மருத்துவர்கள் சிகிச்சை
போட்டி தொடங்கியதும் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் காளைகள் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் பாதுகாப்பான முறையில் உரிமையாளர்கள் அழைத்துச் செல்ல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டினர் கண்டுகளித்தனர்
காளையின் உரிமையாளர்கள் அழைத்துச் செல்வதற்கு ஏற்ப அறிவுரைகளும் வழங்கப்பட்டு இருந்தன. போட்டியை ஏராளமான வெளிநாட்டினரும் பார்த்து ரசித்தனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு தனி கேலரியில் அமர்ந்து பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.