அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்கள்.. டிஆர்பி அறிவிப்பு... முதல்வருக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 2026 ஜனவரி மாதத்திற்குள் 19,260 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் நியமன தேர்வு நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. எனவே மறு தேர்வு நடத்தாமல் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிட வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்கள் மோகன்ராஜ், கலைவாணி, பாஸ்கர் ஆகியோர் நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு, தமிழ் தகுதி தேர்வு, நியமன தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சுமார் 37 ஆயிரம் பேர் உள்ளனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய பயிற்றுனர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2023-24-ம் கல்யாண்டில் நியமன தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்று, 2,800 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. 726 வட்டார வள மைய பயிற்றுனர் பணியிடங்களை நிரப்பவில்லை.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் 2026 ஜனவரி மாதத்திற்குள் 19,260 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஆனால் காலி பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.
தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் நியமன தேர்வு நடத்தப்போவதாக அறிவித்து உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு, தமிழ் தகுதி தேர்வு, நியமன தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் பணி கிடைக்காமல் காத்திருக்கிறார்கள். எனவே மறு நியமன தேர்வு நடத்தாமல் தகுதியானவர்களை கொண்டு பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை பிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
முன்னதாக நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் ல் 2026-ம் ஆண்டுக்கான அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது அதில் ஒவ்வொரு பணியிடங்களுக்கான அறிவிப்பும், அதற்கான தேர்வும் எப்போது நடைபெறும் என உத்தேசமாக கூறியுள்ளது. அதன்படி, ஏற்கனவே வெளியிடப்பட்ட அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மே மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருவள்ளூர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு, தேர்வு ஜூன் மாதத்தில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என்றும், தேர்வு ஜூலை மாதத்தில் நடக்கும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பில் கூறியுள்ளது. முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கான அறிவிப்பு ஜூன் மாதத்திலும், தேர்வு ஆகஸ்டு மாதத்திலும் நடக்கும் எனவும், செட் தேர்வு குறித்த அறிவிப்பு ஜூலையில் வெளியிடப்பட்டு, செப்டம்பரில் தேர்வு நடைபெறும் எனவும் அதில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு மே மாதங்களில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு அதற்கான தேர்வு ஜூலையிலும், அடுத்ததாக அக்டோபரில் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு டிசம்பரிலும் தேர்வு நடைபெறும் என ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு இந்த அட்டவணையில் இடம்பெறவில்லை.












Click it and Unblock the Notifications