தஞ்சை ராகத் டிராவல்ஸ் 400 கோடி மோசடி வழக்கில் திருப்பம்.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கியது யார்?
திருச்சி : தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரைச் சேர்ந்த கமாலுதீன் என்பவர் ராகத் பஸ் டிரான்ஸ்போர்ட் என்ற பஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது நிறுவனத்தில் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறி, ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூல் செய்தார். இப்படி வசூல் செய்து ரூ.400 கோடி மோசடி செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ராகத் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரின் மைத்துனரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்,
தஞ்சாவூர் அருகே ரஹ்மான் நகரைச் சேர்ந்த கமாலுதீன் என்பவர் ராகத் பஸ் டிரான்ஸ்போர்ட் என்ற பஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். ராகத் பஸ் டிரான்ஸ்போர்ட் என்பது பொதுமக்களின் முதலீட்டை பெற்று இயங்கி வந்த நிறுவனம் ஆகும். தஞ்சை வட்டாரம் முழுக்க ராகத் டிராவல்ஸ் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த நிறுவனம் பலரை முதலாளியாக்குவதாக ஒரு திட்டத்தை அறிவித்தது. இதன்படி ராகத் நிறுவனத்தில் தொழிலில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக கூறியிருக்கிறார்கள். இதன்படி மாநிலம் முழுவதும் ஏஜெண்டுகள் மூலம் பலரிடம் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை டிராவல்ஸ் உரிமையாளர் கமாலுதீன் வசூல் செய்துள்ளார்.

ஒரு பஸ்சுக்கு 16 பேரை முதலீடு செய்ய வைத்துள்ளார். அதில் வரும் வருமானத்தை பஸ் பராமரிப்பு, டிரைவர் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் போக, மீதி வரும் லாபத்தொகையை சரிபங்காக 16 பேருக்கு பிரித்து கொடுக்கப்படும் என ஒப்பந்தம் செய்துள்ளார். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் தாங்கள் சிறுக சிறுக சேர்த்த பணத்தை முதலீடு செய்துள்ளனர்.
ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லாப தொகையை முறையாக கமாலுதீன் வழங்கியிருக்கிறார். லாப பணத்தை முறையாக வழங்கியதை கேள்விப்பட்டு ஆச்சர்யமடைந்த பலர், தங்கள் உறவினர்கள், நண்பர்களை முதலீடு செய்ய ஊக்குவித்துள்ளனர். இதனிடையே அந்த நேரம் பார்த்து கொரோனா ஊரடங்கு வந்து மொத்தமாக முடக்கியது.
இதன் காரணம் 2 ஆண்டாக முதலீடு செய்தவர்களுக்கு லாப தொகை வழங்காமல் கமாலுதீன் சமாளித்துள்ளார். ஆனால், அந்த நேரத்தில் பஸ்சுக்காக வசூல் செய்த பணத்தில் பஸ்களை வாங்காமல், முதலீடு செய்தவர்களின் பணத்தில் ரூ.400 கோடிக்கு மேல் செலவு செய்து, பண்ணை வீடுகள், பள்ளிக்கூடம், வெளிநாட்டில் ஓட்டல்கள் என்று சொத்துக்களை அவர் பெயரிலும், அவருடைய உறவினர் பெயரிலும் வாங்கிவிட்டாராம்.
இதனிடையே அவரது நிறுவனத்திற்கு சொந்தமான 136 பஸ்களில், 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் கடனில் இருப்பதும் தெரியவந்தது. இச்சமயத்தில், உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கமாலுதீன் இறந்துவிட்டார். இதையடுத்து முதலீடு செய்தவர்கள் கமாலுதீனின் மனைவி ரெஹானா பேகம், அவரது மகன்களான அப்சல் ரகுமான், ஹாரிஸ் ஆகியோரிடம் தாங்கள் முதலீடு செய்த பணத்தை கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவர்கள் இதற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை எனக் கூறியுள்ளனர். மேலும் அவரை புதைத்துவிட்டோம், தோண்டி எடுத்து பணத்தை பெற்று கொள்ளும் படி கூறியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்கள். மேலும் பல்வேறு போராட்டங்களையும் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தினார்கள்.

சுமார் 6 ஆயிரம் பேர் கொடுத்த புகாரின் பேரில் ரூ.400 கோடி மோசடி செய்ததாக கமாலுதீனின் மனைவி மற்றும் உறவினர்கள், ராகத் டிரான்ஸ்போர்ட் ஊழியர்கள் என்று சுமார் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கமாலுதீன் மற்றும் அவருடைய உறவினர்கள் வீடுகளை போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
அத்துடன் இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க அவர்களின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது. மேலும் கமாலுதீனின் மனைவி ரெஹானா பேகம், மகன் அப்சல் ரகுமான், சகோதரர் அப்துல்கனி, நிறுவனத்தின் மேனேஜர் நாராயணசுவாமி மற்றும் ஊழியர்கள் உள்பட 7-க்கும் மேற்பட்டோரை போலீசார் ஏற்கனவே கைது செய்தார்கள்.
அதேநேரம் இந்த வழக்கில் கமாலுதீனின் மைத்துனரான பாபநாசம் அம்மாபேட்டையை சேர்ந்த சுகைல் அகமது (வயது 36) கடந்த 3 ஆண்டுகளாக கத்தார் நாட்டில் தலைமறைவாக இருந்தார். மேலும் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி சுகைல் அகமது இந்தியா திரும்புவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் திருச்சி விமான நிலையத்துக்கு சென்று, கத்தாரில் இருந்து வந்த சுகைல் அகமதுவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர் மதுரையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட்) நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் கமாலுதீனின் மனைவி, மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவற்றை கைப்பற்றும் பணியினை போலீசார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications