பாறைகளால் இயந்திரங்களே திணறுகின்றன.. இப்படி இருக்கும் என எதிர்பார்க்கவில்லை.. அமைச்சர் விஜயபாஸ்கர்
இறுதி முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
Recommended Video
திருச்சி: இயந்திரங்களே பாறைகளால் திணறுகின்றன.. நடுக்காட்டுப்பட்டி பாறைகள் அவ்வளவு கடினமாக இருக்கின்றன.. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததே இல்லை. இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் எனதெரியவில்லை" என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடினமான பாறைகள் இருப்பதால் 2-வது ரிக் இயந்திரத்தின் மூலமும் குழியிடும் பணி தாமதமாகியது. பாறைகள் அருகருகே இருப்பதால் வேகமாக குழி தோண்ட முடியவில்லை என்கிறார்கள். இதனால் சுஜித்தை மீட்கும் பணி 63 மணி நேரத்தை கடந்தும் நடந்து வருகிறது.
ஆனால், சில மணி நேரமாக உடைக்கப்பட்டு வரும் பாறைகள் இளகுவாக இருக்கிறதாம். அதன் நிறமும் மாறி உள்ளதாம். இதைதவிர, கடினமாக உள்ள பாறையை உடைக்க சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற டிரில் பிட் வருகிறது.

விஜயபாஸ்கர்
அதி நவீன டிரில் மெஷின் ஆகாஷ் வந்ததும், டிரில் பணி மேலும் வேகமடையும் என தெரிகிறது. இன்னும் சற்று நேரத்தில் ஆகாஷ் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமாகா தலைவர் ஜிகே வாசன் நிகழ்விடத்துக்கு பார்வையிட்டார். நடக்கும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கரும், ஜிகே வாசனும் கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விஜயபாஸ்கர் சொன்னதாவது:

40 அடி குழி
திட்டமிட்டபடியான ஆழத்தை எட்ட முடியவில்லை. கணித்தபடி 2 ரிக் இயந்திரங்களாலேயே முழுமையான பள்ளம் தோண்ட முடியவில்லை. கிட்டத்தட்ட 40 அடிக்குதான் குழி தோண்ட முடிந்தது. அதற்கு மேல் முடியவில்லை.

கடின பாறைகள்
பாறைகளே இயந்திரத்தால் திணறுகின்றன. இவ்வளவு கடினமான பாறைகளை இதுவரை பார்த்ததே இல்லை. இயந்திரங்களே சிதறகூடிய அளவுக்கு பாறைகள் உள்ளன. உள்ளே செல்ல செல்ல பாறைகள் தான் இருக்கின்றன. இப்படி ஒரு கடின பாறைகளை ஊழியர்களே பார்த்தது இல்லை. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் நிலையில் உள்ளோம்.

குழந்தை மீது மண்
ஒரு அங்குலத்தைவிட கூடுதலாக மண் குழந்தை மீது விழுந்து உள்ளது. குழந்தையிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லை என்ற நிலை நீடிக்கிறது. குழந்தை விழுந்து 4 நாட்கள் ஆனதால், டாக்டர்களிடமும் ஆலோசித்து வருகிறோம். மாற்று வழிகள் குறித்து ஆலோசிக்கிறோம்.

ஆலோசனை
எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என தெரியவில்லை. அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். முதல்வர், துணை முதல்வர், மாநில, தேசிய மீட்பு படை தலைவர், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளோம். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மீட்புக் குழு நிபுணர்களிடம் மாற்றி வழி குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்" என்றார்.

புதிய தொழில்நுட்பம்
இதையடுத்து பேசிய ஜிகே வாசன், "சவாலான குழந்தை மீட்பு பணியை அர்ப்பணிப்புடன் அனைவரும் செய்து வருகின்றனர். மிகுந்த எச்சரிக்கையுடன் திறம்பட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மீண்டும் இதுபோன்று ஏற்படாமல் தடுக்க புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பது அவசியம்" என்றார்.












Click it and Unblock the Notifications