என் தலைவனை பற்றி பேச குஷ்பு யார்...? திருமாவளவன் ஆதரவாளர் திருச்சியில் தீக்குளிக்க முயன்ற நிகழ்வு..!
திருச்சி: நடிகை குஷ்புவை கண்டித்து திருச்சியில் ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனுதர்ம நூல் தொடர்பான விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கலகம் மூண்டுள்ளது. விசிக தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணியினர் நேற்று போராட்டங்கள் நடத்தினர்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகை காயத்ரி ரகுராம் ஒரு படி மேலே சென்று காலில் உள்ளதை கழற்றத் தெரியும் என திருமாவளவனை சீண்டும் வகையில் பொதுவெளியில் பேசியிருந்தார். இதனிடையே நடிகை குஷ்பு சிதம்பரத்திற்கு போராட்டம் நடத்த சென்ற நிலையில் முட்டுக்காடு அருகே அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவர் திருமாவளவனுக்கு எதிராக பேசிய கருத்துக்களும், திருமா மீதான குஷ்புவின் விமர்சனங்களும் செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டன. இதனை பார்த்த ஆட்டோ ஓட்டுநரும், திருமாவளவனின் தீவிர ஆதரவாளருமான அந்தோணி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

குஷ்புவை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி தீக்குளிக்க முயன்ற விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குஷ்புவை கண்டித்து முழக்கம் எழுப்பியவாறு திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே அந்தோணி தீக்குளிக்க முயன்றதை பார்த்து அங்கிருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றியுள்ளனர்.
இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற காந்திமார்க்கெட் போலீஸ், அவரை சமாதானம் செய்து விசாரணை நடத்தியது. அப்போது தனது தலைவர் திருமாவை விமர்சிக்க குஷ்புவுக்கு என்ன தகுதியுள்ளது என ஆட்டோ ஓட்டுநர் அந்தோணி தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். குடும்பத்தை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் இது போன்ற காரியங்களில் இனி ஈடுபட வேண்டாம் எனவும் போலீஸார் அறிவுரை நல்கி அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications