எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்கணும்.. பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி.. சுஜித்தின் தாய்
Recommended Video
திருச்சி: எனது மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.. சுஜித் தவறி விழுந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதே என் ஆசை என்று சுஜித்தின் தாய் கலாமேரி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தனது தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்தான்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். முதலில் 25 அடியில் தவறி விழுந்த குழந்தை, மெல்ல மெல்ல சரிந்து 70 அடிக்கு சென்றுவிட்டான். அதன் பிறகு மீட்பு முயற்சியின் போது 80 அடிக்கு கீழ் சென்றுவிட்டான்.

குழந்தை சுஜித்
குழந்தை சுஜித்தை மீட்க கடந்த ஐந்து நாட்களாக பல்வேறு கட்ட முயற்சிகள் நடந்தது. பொதுமக்கள் பலரும் சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.

நல்லடக்கம்
சாதி மதங்களை கடந்து அனைவரும் சுஜித் உயிர் பிழைக்க வேண்டும் என்று தெய்வங்களை வேண்டினர். ஐந்து நாட்கள் மீட்பு பணி நீடித்த நிலையில், குழந்தை சுஜித் இன்று அதிகாலை சடலமாகத்தான் மீட்கப்பட்டான். அவனது உடல் இன்றே நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழப்பு தொடரக்கூடாது
இந்நிலையில் சுஜித்தின் தாய் கலாமேரி கூறுகையில், "ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் தொடர கூடாது. எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும். சுஜித் தவறி விழுந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பதே எனது ஆசை.

உருக்கம்
தங்களால் இயன்ற அளவிற்கு சுஜித்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக முதல்வர் ஆறுதல் கூறினார் எனது மகனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என கண்ணீருடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications