டிச. 9ல் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
திருச்சி: திருவானைக்கா (திருவானைக்காவல்) அருள்மிகு சம்புகேசுவரர் உடனுறை அகிலாண்டேசுவரி அம்மன் திருக்கோயிலில் டிசம்பர் 9 ஆம் தேதி முதல்கட்ட மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பஞ்சப்பூதத் திருத்தலங்களில் நீர்த்தலமாக விளங்கி வருவது திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோயிலாகும். வழக்கமாக சிவாலயங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது மரபு. ஆனால், திருவானைக்கா கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தி 18 ஆண்டுகளாகிவிட்டன. இதைத் தொடர்ந்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, இதற்காக ரூ.5 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து திருக்கோயிலுள்ள 5 பெரிய கோபுரங்கள் புனரமைப்பு செய்யப்பட்டு, ஏகவர்ணம் பூசப்பட்டது. மேலும், கோயிலிலுள்ள சிறிய கோபுரங்கள், பல்வேறு சன்னதிகளில் திருப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மகா கும்பாபிஷேகத்தை இரு கட்டங்களாக நடத்த இந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.
தற்போது, கோயிலின் பல்வேறு பிரகாரங்களில் உள்ள 45 பரிவாரத் தேவதைகளின் சன்னதிகளில் மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தவிர, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
டிசம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் உதவி ஆணையர் கோ. ஜெயப்பிரியா மற்றும் பணியாளர்கள், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.