திருச்சி மக்களுக்கு விரைவில் குட் நியூஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலினே அறிவிப்பார்.. கே.என்.நேரு தகவல்!
திருச்சி: திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மண்ணச்சநல்லூர் ஒன்றியம் பூனாம்பாளையம் கிராமத்தில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டு வளர்ந்துள்ள குறுங்காட்டினை மக்கள் நடைபாதை பயிற்சிக்காக திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கே.என்.நேரு கூறுகையில், 'தமிழ்நாடு அரசு சார்பில் 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு இதுவரை 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இன்னும் 4 லட்சம் மரக்கன்றுகள் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நடப்படும்' என்று தெரிவித்தார். அப்போது, திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்தப்படுமா? என்று நிருபர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- 2018-ம் ஆண்டு கடந்த ஆட்சியில் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிட்டு உள்ளனர். தி.மு.க தேர்தல் அறிக்கையில் மேலும் 6 புதிய மாநகராட்சி உருவாக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிகளை விரிவுபடுத்தவும், புதிய நகராட்சிகளை ஏற்படுத்தவும், அதிக மக்கள் தொகை வருமானம் உள்ள பேரூராட்சிகளை, நகராட்சியாக உயர்த்த ஆய்வு நடத்தப்பட்டு முதல்வருக்கு அனுப்பி உள்ளோம்.
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்போது ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதல் பெறப்பட்டு அவரே இதனை அறிவிப்பார். சென்னையில் பக்கிங்காம், அடையாறு, கூவத்தில் சாக்கடை கலப்பதை தடுத்து, அந்த நீரை சுத்திரித்து ஆலைகளுக்கு வழங்குவதற்கு ரூ.2,500 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்கி, முறையான திட்டமிட்ட பின்னர் மானிய கோரிக்கையில் விரிவாக சமர்ப்பிக்கப்படும் என்று கே.என்.நேரு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications