ராஜ்யசபா தேர்தல்.. வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா? தொண்டர்கள் அமைதி காக்க வலியுறுத்தல்
திருச்சி: தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்பிக்கள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தன்னுடைய வேட்புமனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பதை சொல்ல முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகததில் கனிமொழி(திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), வி. மைத்ரேயன்(அதிமுக), ஆர்.லட்சுமணன்(அதிமுக), டி.ரத்தினவேல்(அதிமுக), டி.ராஜா(சிபிஐ) உள்ளிட்ட 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவி காலம் வருகின்ற 24ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கும் வரும் 18 ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பபு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது.
18ம் தேதி தேர்தல்
தமிழகத்தில் உள்ள 6 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கும் தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது.
இன்று வேட்பு மனு தாக்கல்
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சண்முகம் மற்றும வில்சன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். அதிமுக கூட்டணி சார்பில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் அதிமுக நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்கள் 3 பேரும் இனறு காலை 12 மணி அளவில் சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். அப்போது முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர். முன்னதாக இன்று காலை திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வைகோவுக்கு மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஏற்பார்களா
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை நாளை நடைபெறுகிறது. இந்த சூழலில் தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தீர்ப்பை ஒரு மாதத்திற்கு நீதிமன்றம் நிறுத்திவைத்திருந்தாலும், மனுவை ஏற்பார்களா என்பது குறித்து தெளிவான தகவல்கள் தெரியவில்லை.
யாருடைய சதியும் இல்லை
இதுபற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் நேற்று காலை கூறுகையில், ராஜ்யசபா தேர்தலுக்கான தன்னுடைய வேட்புமனு ஏற்கப்படுமா என்பதை சொல்ல முடியாது என்றும், ஜூலை 9-ம் தேதி நடைபெறும் பரிசீலனையின் போதுதான், மனு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்பது தெரியும் என்றும்,அதுவரை தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் தான் மாநிலங்களவைக்கு செல்லக் கூடாது என யாரும் சதி செய்வதாக நினைக்கவில்லை என்றும் வேட்பு மனு பரிசீலனை இருப்பதால், எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.