விவசாயிகள் அணிவித்த பச்சைத்துண்டு! கூட்டம் முடியும் வரை தோளிலிருந்து எடுக்காத திருச்சி கலெக்டர்!
திருச்சி: தனக்கு விவசாயிகள் அணிவித்த பச்சைத் துண்டை குறைதீர் கூட்டம் முடியும் வரை தனது தோளிலிருந்து அகற்றாமல் அணிந்திருந்தார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.
இதன் மூலம் நானும் விவசாயி தான் என்பதையும் விவசாயிகள் பக்கம் துணை நிற்பேன் என்பதையும் அவர் உணர்த்தியுள்ளார். அதுமட்டுமல்ல விவசாயிகளுக்கு விருப்பம் என்றால் விவசாயிகள் குறைதீர் அனைத்து கூட்டத்திலும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்க தயார் எனக் கூறி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக இருக்கும் பிரதீப் குமாரை பொறுத்தவரை விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் வேலையாக அதனை தீர்த்து வைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிடுவார். இதனால் இவருக்கு திருச்சி மாவட்ட விவசாயிகள் மத்தியில் நற்பெயர் நிலவி வருகிறது.
அந்த வகையில் முதலமைச்சரிடம் சிறந்த நிர்வாகத்துக்கான விருதை பெற்றமைக்காக திருச்சி மாவட்ட விவசாயிகள், கலெக்டர் பிரதீப் குமாருக்கு பச்சைத் துண்டு அணிவித்தனர். அதனை போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு உடனே கழற்றி ஓரமாக போடாமல் கடைசி வரை தனது கழுத்திலேயே போட்டிருந்தார் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.
இதனிடையே காவிரியில் தண்ணீா் திறக்காவிட்டால் இந்தாண்டு சம்பா பயிா் சாத்தியமில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் விவசாயிகள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.

குறைதீர் கூட்டத்தில் பேசிய தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதி சின்னதுரை, காரிவிப் பாசனம் பெறும் 12 மாவட்டங்கள், காவிரியால் குடிநீா் பெறும் 21 மாவட்டங்களை பாலைவனமாக்கும் நடவடிக்கையை கா்நாடகம் அரங்கேற்றி வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும் காவிரியில் தண்ணீா் திறக்கக் கோரும் போராட்டத்தை தமிழக அரசே முன்னெடுத்து மத்திய அரசுக்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ.விஸ்வநாதன், குறுவைப் பயிரைக் காப்பாற்ற தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் சூழல் உள்ளதாக்வும் இதேநிலை தொடா்ந்தால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியே நடைபெறாது என்பதோடு உணவு உற்பத்தியில் தமிழகம் பின்தங்க நேரிடும் என வேதனைத் தெரிவித்தார்.
கா்நாடகம் நமக்கு 10 டிஎம்சி தண்ணீா் தருவதாக தெரிவித்திருப்பது, எந்த வகையிலும் போதுமானதல்ல என தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications