கலெக்டரின் கண்ணை கட்டிவிட்ட அமைச்சர்! தலைக்காட்டாத திமுக MLAக்கள்! திருச்சியில் தினுசா நடந்த விழா!
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரின் கண்களை கட்டிவிட்ட அமைச்சர் கே.என்.நேரு, அவர் கையில் ஒரு குச்சியை கொடுத்து உறியடி போட்டியில் இறக்கிவிட்டார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். இந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு உறியடி போட்டியில் பானையை உடைக்க மூன்று முறை முயற்சித்தும் அவரால் முடியவில்லை.

இதனால் தனது அருகில் நின்று கொண்டிருந்த கலெக்டர் பிரதீப் குமார் கண்களில் துணியை கட்டிவிட்டு கையில் குச்சியை கொடுத்து உறியடி போட்டியில் அவரை இறக்கிவிட்டார்.இதையடுத்து வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்ல வேண்டும் எனக் கூறி அங்கிருந்து அமைச்சர் நேரு புறப்பட்டுச் சென்றார்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் இந்த பொங்கல் விழாவுக்கான அழைப்பு முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மற்றொரு மாவட்ட அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் சென்றடைந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த எந்த சட்டமன்ற உறுப்பினரும் இந்த பொங்கல் விழா பக்கம் தலைக்காட்டவில்லை.
கடந்த சில மாதங்களாகவே சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சவுந்திரப்பாண்டியன் உள்ளிட்டோர் அமைச்சர் நேரு பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றனர். அதேபோல் இன்னும் சில திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஆக்டிவாக இல்லை. இதற்கு சில உட்கட்சி விவகாரங்கள் காரணமாக கூறப்படுகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் திருச்சி விமான நிலைய திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்ற நிலையில் அதற்கான அழைப்பு முந்தைய நாள் மாலை வரை தொகுதி எம்.எல்.ஏ.வுகே செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியிலும் பனிப்போர் நிலவுவதால் இப்போதே அதை கவனித்தில் கொண்டு சரிகட்டும் முயற்சிகள் நடந்து வருகின்றன.












Click it and Unblock the Notifications