ராமஜெயம் வழக்கு.. 10 ஆண்டுகளுக்கு துப்பு துலங்குகிறது.. உண்மை கண்டறியும் சோதனை.. 12 பேருக்கு சம்மன்!
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நவ.1ம் தேதி 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திருச்சி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29ல் நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டையே பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், வேறு சில விசாரணைப் பிரிவுகளுக்கும் வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், குற்றவாளிகள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

சிபிசிஐடி போலீஸ் விசாரணை
இந்தச் சூழலில், ராமஜெயம் கொலை வழக்கு குறித்த விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, சுவரொட்டிகள் ஒட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.

உண்மைக் கண்டறியும் சோதனை
இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலன் விசாரணை குழுவினர் இவ்வழக்கு சம்பந்தமாக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 பேர் மீது உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

யார் யாரிடம் சோதனை?
தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 12 நபர்களான திண்டுக்கல் மோகன்ராம், சாமி ரவி, நரைமுடி கணேசன், சீர்காழி சத்யராஜ், மாரிமுத்து, தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்கோவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சுரேந்தர், சிவகுணசேகரன், கலைவாணன் உள்ளிட்டவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது

விரைவில் கைது?
இதற்காக 12 பேரும் வரும் நவ.1ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராஜ வேண்டும் என்று நீதிமன்றம் சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விரைவில் ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications