கிரிக்கெட் ப்ளேயராக மாறிய திருச்சி கலெக்டர்! எல்லா பந்துகளையும் ஃபோர், சிக்ஸர் என விளாசி அசத்தல்!
திருச்சி: கை தேர்ந்த கிரிக்கெட் பிளேயர்களை போல் எல்லா பந்துகளையும் ஃபோர்கள், சிக்ஸர்களாக அடித்து விளாசி அசத்தியிருக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.
கலெக்டருக்குள் ஒரு பெரிய ப்ளேயரை ஒளிந்திருக்கிறாரே என கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் கமெண்ட் அடித்தனர்.
பேட்டிங்கில் மட்டுமில்லை பந்துவீச்சிலும் தனது திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்திருந்தார் திருச்சி கலெக்டர் பிரதீப் குமார்.
திருச்சி சிவா உணர்ச்சி பேச்சு.. பாதியில் எழுந்த தொண்டர்! சினிமா பார்க்க முடியுது -மேடையிலேயே டென்சன்
திருச்சியில் கிரிக்கெட்
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை தொடங்கப்பட்டு நூற்றாண்டை நிறைவு செய்துள்ள இந்த தருணத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்குபெற்ற கிரிக்கெட் போட்டி திருச்சியில் நடைபெற்றது. கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவும், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரும் தொடங்கி வைத்தனர்.
கிரிக்கெட் விளையாடிய கலெக்டர்
கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த கையோடு அமைச்சர் நேரு அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரோ வீரர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று கிரிக்கெட் மட்டையை கையில் ஏந்தி மைதானத்தில் களமிறங்கினார். பெயருக்கு ஓரிரு பந்துகளை அடித்துவிட்டு அவர் புறப்பட்டு விடுவார் எனப் பார்த்தால், தன்னை நோக்கி வீசப்பட்ட அனைத்து பந்துக்களையும் ஃபோர்கள், சிக்ஸர்களாக விளாசி ஒரு பெரிய கைதட்டலை அள்ளினார்.
மிகவும் எளிமையாக
கலெக்டருக்கு இவ்வளவு பெரிய திறமை இருக்கிறதா என்றும் ஒரு பெரிய ப்ளேயரை அவருக்குள் ஒளிந்திருக்கிறாரே எனவும் அங்கிருந்தவர்கள் கமெண்ட் அடித்தனர். பொதுவாக அரசு அதிகாரிகள் என்றால் சற்று விறைப்பாக, முறைப்பாக இருப்பார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியராக இருப்பினும் கூட எவ்வித படோடாபமும் இல்லாமல் எளிமையாக களமாடி கவனம் ஈர்த்திருக்கிறார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.
இளம் வயது
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரை பொறுத்தவரை இளம் வயது என்பதால் நிர்வாகப் பணிகளிலும் சுணக்கமின்றி சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மக்களுடனான அவரது அணுகுமுறைகளிலும் இதுவரை பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.