ஆட்களை போட்டால் வேலைக்கு ஆகாது... நானே உட்காருகிறேன்... வித்தியாசமான இனிகோ இருதயராஜ் MLA..!
திருச்சி: திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நாள் தவறாமல் தனது அலுவலகத்தில் ஆஜராகி மக்களிடம் மனுக்கள் பெறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக உள்ள இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்குத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் சென்னைவாசி என தேர்தலுக்கு முன்பு முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை தூள் தூளாக உடைத்தெறியும் வகையில் திருச்சியில் குடியேறினார்.

அதோடு மட்டுமல்லாமல் திருச்சி கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நாள் தவறாமல் சென்று குறைந்தது 3 மணி நேரமாவது அங்கு அமர்ந்து நேரடியாக மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று அதனை உரிய துறைகளுக்கு அனுப்பி வைக்கிறார்.
இன்று பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் அலுவலகத்தில் மனுக்களை பெறவும், மக்களின் குறைகளை கேட்கவும் ஆட்களை பணியமர்த்தியுள்ள சூழலில், இனிகோ இருதயராஜின் இந்த செயல்பாடு அவரை தேர்வு செய்த வாக்காளர்களின் நன்மதிப்பை பெற்றுள்ளது. எம்.எல்.ஏ. ஊரில் இல்லை, அங்கு வந்து பாருங்க, இங்க வந்து பாருங்க என்ற அலைக்கழிப்புக்கே வேலையில்லை.
சட்டமன்றக் கூட்டத் தொடர் இல்லாத நாட்களில் வாரத்தில் 5 நாட்கள் திருச்சியிலும், 2 நாட்கள் மட்டும் சென்னையிலும் நேரத்தை செலவிடுகிறார் இனிகோ இருதயராஜ். இதனிடையே உள்ளூர் அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மற்றும் கே.என்.நேரு ஆகியோர்களுடன் அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்ளத் தவறுவதில்லை.
தினமும் தொகுதி சார்ந்த பிரச்சனைகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக 2 மணி நேரமாவது மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து மீட்டிங் நடத்திவிடுகிறார். தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சியில் பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்கள் பள்ளமும் மேடுமாக காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் அவர் கவனத்தில் கொண்டு இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications