கொள்ளையடிக்கப்பட்ட பணம்.. நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கியதாக சுரேஷ் தகவல்.. விரைந்தது தனிப்படை
Recommended Video
திருச்சி: திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட சுரேஷை தனிப்படை போலீசார் திருவண்ணாமலை அழைத்து செல்கிறார்கள். கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கிவைத்துள்ளதாக, போலீஸ் விசாரணையில் சுரேஷ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில், கடந்த 2-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் திவிர வாகன சோதனை நடத்தினர்.
திருவாரூர் மடப்புரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன் என்பவர் போலீஸை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் விரட்டிப் பிடித்தனர். ஆனால், அவரின் கூட்டாளியும் நகைக்கடைக் கொள்ளையருமான சுரேஷ் தப்பினார்.

சுரேஷ்- முருகன்
இதையடுத்து . போலீஸார், மணிகண்டனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் 5 கிலோ மதிப்பிலான தங்க நகைகள் மட்டுமே இருந்தது. இதையடுத்து அவரிடம் நடந்த விசாரணையில் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் மணிகண்டன் ஈடுபட்டது தெரியவந்தது.

செங்கத்தில் சரண்
இதற்கிடையே சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீசார் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணியின் முன்பு கடந்த 5ம் தேதி ஆஜர்படுத்தினர். தலைமறைவாக இருந்த சுரேஷ், கடந்த 10-ம் தேதி திருவண்ணாமலை செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாள் காவலில் எடுத்து விசாரித்து வரும் திருச்சி போலீசார் நகைகள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

நகைகள் பதுக்கல்
இந்நிலையில் கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளை திருவண்ணாமலையில் பதுக்கிவைத்துள்ளதாக, போலீஸ் விசாரணையில் சுரேஷ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்பேரில் சுரேஷை தனிப்படை போலீசார் திருவண்ணாமலை அழைத்து செல்கிறார்கள்.

12 கிலோ தங்கம்
முன்னதாக திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகன், கடந்த 11ஆம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனிடையே அவர் பெங்களூருவில் நடந்த பல்வேறு கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவில் மட்டும் 119 வழக்குகள் முருகன் மீது உள்ளதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர். முருகன் கொடுத்த தகவலின்படி, திருவெறும்பூர் அடுத்த பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4.30 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க நகைகளை பெங்களூரு போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைப்பற்றி உள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications