தவெக நிர்வாகி வெட்டிக்கொலை.. திருச்சி அருகே ரௌடியை சுட்டுப் பிடித்தது போலீஸ்!
திருச்சி: திருச்சி அருகே தவெக நிர்வாகியான ரவுடி நவீன் குமார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது நண்பரான ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமார் (30). இவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் ஆதிகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற கலைபுலி ராஜா. இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜா தனது நண்பர்களிடம் இனி நவீன்குமாருடன் எந்த தொடர்பும் யாரும் வைத்துக்கொள்ளக்கூடாது என கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜா மற்றும் நவீன் குமார் இருவருக்கும் பொதுவான நண்பருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு அன்றைய நாளில் இருவரையும் சமாதானப்படுத்தி வைப்பதற்காக நவீன் குமாரை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளனர். இதில் நவீன்குமார், கலைபுலி ராஜா மற்றும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து, ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமாரை சரமாரியாக அறிவாளால் வெட்டி சாய்த்து உள்ளனர்.
அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்ற நிலையில், அங்கு நவீன் குமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த நவீன் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தலைமறைவான குற்றவாளிகளை தேடி வந்தனர். உடன் இருந்த நண்பர்களே தங்களது நண்பனை அரிவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மணச்சநல்லூர் அருகே ரவுடி கலைபுலி ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். சிறுகனூர் பகுதியில் ரவுடி ராஜா பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரைப் பிடிக்க போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் கலைபுலி ராஜா, அவர்களைத் தாக்கி விட்டு தப்ப முயன்றுள்ளார். இதையடுத்து போலீsஆர் ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.
காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த கலைப்புலி ராஜாவை போலீசார் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தினர். அவரிடம் நவீன் குமார் கொலை தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications