மறைந்த முன்னாள் அமைச்சர் மகனின் தில்லாலங்கடி வேலை..!
திருச்சி: மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜின் மகன் கலைராஜா, போலி எம்.பி.பாஸ் மூலம் ரயிலில் பயணித்து ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்.
அண்மையில் மறைந்த திருச்சி என்.செல்வராஜ் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் வனத்துறை அமைச்சராக இருந்தவர். 90 களில் திமுகவின் திருச்சி மாவட்டச் செயலாளராகவும், 1985-லேயே திமுக எம்.பியாகவும் பொறுப்பு வகித்தவர்.
அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் பெயர் கலைராஜா, இளையவர் பெயர் கருணைராஜா. அவர்கள் இருவரும் என்.எஸ்.கே.கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கலைராஜா பெங்களூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்சிக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தார். வழக்கமாக நடைபெறும் டிக்கெட் பரிசோதனை எல்லாம் முடிந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த அவரை ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள் எழுப்பி டிக்கெட்டை கேட்டுள்ளனர்.
உடனே முன்னாள் எம்.பி.க்கள் பயன்படுத்தும் சலுகை அட்டையை எடுத்துக் கொடுத்துள்ளார். அதை வாங்கி பார்த்த அதிகாரிகள், நீங்க முன்னாள் எம்.பி.யா? எனக் கேட்க, அதற்கு நான் எம்.பி.இல்லை எனது தந்தை எம்.பி.யாக இருந்தார் என கலைராஜா பதில் தந்துள்ளார்.
ரயில்வே விஜிலென்ஸ் அதிகாரிகள் மேற்கொண்டு விசாரித்ததில், திருச்சி செல்வராஜ் அண்மையில் காலமானது தெரிய வந்துள்ளது. ஒரு முன்னாள் எம்.பி.க்கு வழங்கப்பட்ட சலுகை அட்டையில் அவர் உயிருடன் இல்லாதபோது எப்படி பயணிக்கலாம் எனக் கேள்வி எழுப்பிய அதிகாரிகள் கொழுத்த தொகையை அபராதமாக கலைராஜா தலையில் கட்டினர்.
இதனிடையே செல்வராஜ் எப்படிப்பட்ட ஆளு, அவர் பெயரை கெடுப்பதற்கென்றே மகன் இருக்கிறாரே என திருச்சி திமுகவினர் புலம்புகின்றனர்.