அடடே.. மோடிக்கு முன்னாடி கையெடுத்து கும்பிட்டது யாரு பாருங்க.. திருச்சி சூர்யாவின் ஜம்ப்!
திருச்சி: திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த பிரதமர் மோடியை வரவேற்க வந்தவர்களில் பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யாவும் ஒருவர்.
இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இவர் பாஜகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்து முன்னர் தாம் வகித்த பதவியிலேயே இப்போதும் தொடர்வது தான் ஹைலைட்.

பாஜகவில் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட திருச்சி சூர்யா அக்கட்சியில் மளமளவென வளர்ந்து வந்தார். யூடியூப்களில் பாஜகவின் முகமாக திருச்சி சூர்யா எதிரொலிக்கத் தொடங்கினார். எதையுமே ஒளிவு மறைவின்றி பேசுவதும் அவரது பேச்சு டோனும் ஓரளவு அவர் மீது அரசியல் களத்தில் கவனம் ஈர்க்க வைத்தது. இந்தச் சூழலில் பாஜக சிறுபான்மையினர் அணி நிர்வாகி டெய்சியுடன் நடந்த மோதலால் சர்ச்சையில் சிக்கி ஒரு கட்டத்தில் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அப்போதும் கூட அவர் அண்ணாமலை பற்றி விமர்சிக்காமல், ''அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கத்தை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி" என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஏழெட்டு மாதங்களுக்கு மேலாக அமைதி காத்து வந்த திருச்சி சூர்யா அதிமுகவில் இணையப் போவதாக ஒரு தகவல் உலா வந்தது. இந்நிலையில் தான் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திருச்சி சூர்யாவை பாஜகவில் இணைத்துக் கொள்வதாகவும் அவர் முன்னர் வகித்த பாஜக ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் பதவியிலேயே அவர் தொடர்வார் எனவும் அண்ணாமலை ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பாஜகவிலிருந்து விலகிய போது கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தவர் திருச்சி சூர்யா.
ஆனால் அதே திருச்சி சூர்யாவை மீண்டும் கட்சியில் இணைத்ததோடு மட்டுமல்லாமல் அவர் வகித்த பதவியையே மீண்டும் கொடுத்தார் அண்ணாமலை. இதன் மூலம் கேசவ விநாயகத்துக்கு அண்ணாமலை செக் வைத்ததாக பேசப்பட்டது. இதனிடையே இப்போது பாஜகவில் மீண்டும் இணைந்துள்ள திருச்சி சூர்யா, இன்று திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்க வந்ததன் மூலம் தாம் ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருப்பதை உணர்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications