TVK Vijay: பிரச்சார வாகனத்தில் செய்தியாளர்கள் மைக்கை நீட்டியதும்! முகம் மாறி கண்ணாடியை மூடிய விஜய்!
திருச்சி: திருச்சியில் பிரச்சாரம் செய்ய வாகனத்தில் வந்துக் கொண்டிருக்கும் தவெக தலைவர் விஜய்யிடம் செய்தியாளர்கள் மைக்கை நீட்டியதும் வாகனத்தின் கண்ணாடியை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சுற்றுப்பயணத்திற்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட பிரச்சார வாகனத்தின் கண்ணாடியை திறந்துவிட்டு தொண்டர்களை பார்த்து கையசைத்து வந்தவர், திடீரென கண்ணாடியை மூடிவிட்டார்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலையொட்டி மற்ற கட்சிகளை போல் தவெக தலைவர் விஜய்யும் பிரச்சார பயணத்தை தொடங்கினார். இதுவரை அறிக்கை அரசியல், வொர்க் பிரம் ஹோம் அரசியல் என விமர்சிக்கப்பட்ட நிலையில் இன்று பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

ஆனாலும் அதிலும் ஹைடெக்தான். கேரவன் போன்று தயாரிக்கப்பட்ட பிரச்சார வாகனத்தில் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவரை யாரும் நெருங்க முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வாகனத்தில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்தில் அவர் அமர்ந்திருக்கிறார்.
புறப்பட்ட பிரச்சார வாகனம்
திருச்சிக்கு தனி விமானத்தில் வந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தயாராக இருந்த பிரச்சார வாகனத்தில் ஏறியதும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார். பின்னர் அவரது வாகனம் தொண்டர்கள் மத்தியில் புறப்பட்டது.
3 மணி நேரமாக காத்திருப்பு
அவர் திருச்சி மரக்கடை அருகே என்ன பேச போகிறார் என்பதை கேட்க மக்கள் கூட்டம் அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறார்கள். ஆனால் விஜய்க்கு அனுமதிக்கப்பட்ட அரை மணி நேரம் முடிந்து அரை மணி நேரமாகிவிட்டது. ஆனாலும் மரக்கடைக்கு அவர் வரவே இல்லை.
மரக்கிளைகளில் தொங்கிய தொண்டர்கள்
திருச்சியில் விஜய்யின் பிரச்சார வாகனம் பயணிக்கும் பகுதிகளில் எல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. விஜய் சொன்னதை காற்றில் பறக்கவிட்ட தொண்டர்கள், கட்டடங்களின் மேல் ஏறி நிற்பது, பிரச்சார வாகனத்தை பின் தொடர்வது என போக்குவரத்துக்கு இடையூறான செயல்களை செய்து வருகிறார்கள்.
பிரச்சார வாகனம்
இந்த நிலையில் அவருடைய வாகனம் திருச்சி சுப்பிரமணியபுரத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் கூட்டத்தில் இருந்து நிறைய பேர் மயங்கிவிட்டனர். மேலும் கட்டடத்தின் மேலே நின்றிருந்த தொண்டர்களும் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பு
விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவே இல்லை. ஒரே ஒருமுறை ஆளுநர் அலுவலகத்தில் புகார் கொடுக்க சென்ற போது செய்தியாளர்களை சந்தித்தார். அது கூட அவர் எதற்காக ஆளுநரை பார்க்க வந்தார் என சொல்லிவிட்டு அவர்களின் எந்த கேள்விகளையும் எதிர்கொள்ளாமலேயே புறப்பட்டு சென்றுவிட்டார்.
கண்ணாடியை மூடிய விஜய்
அதைத் தொடர்ந்து அவரை செய்தியாளர்கள் பேட்டி எடுக்க வாய்ப்பில்லாத நிலை இருந்தது. இந்த நிலையில் பிரச்சார வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடியை திறந்தபடியே விஜய் வந்து கொண்டிருந்தார். அவர் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் வணக்கம் வைத்தும் கையசைத்தும் வந்தார். அப்போது அங்கு செய்தியாளர்கள் வந்து விஜய்யிடம் மைக்கை நீட்டிய போது சப்தமே இல்லாமல் கண்ணாடியை மூடிவிட்டார். செய்தியாளர்கள் சந்திப்பதை கூட விரும்பாத விஜய், எப்படி எல்லா மக்களும் அணுகக் கூடிய தலைவராக இருப்பார் என அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மைக்கை நீட்டியதுமே அவரது முகமே மாறிவிட்டதையும் பார்க்க முடிந்தது. இந்த திருச்சியில் கூட்டத்தை முடித்துக் கொண்டு அவர் அரியலூர் செல்கிறார். அங்கும் நிபந்தனைகளுடன் பேச அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்காவது நேரத்திற்கு செல்வாரா, அவரை தொண்டர்கள் செல்ல விடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications